அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீடு மற்றும் அமைச்சரின் ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர், ஆதரவாளர்களின் வீடு, அலுவலகங்களில் நேற்று வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். நேற்று காலை தொடங்கிய சோதனையானது நள்ளிரவு வரை நீடித்தது.
இந்நிலையில், கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜின் சகோதரர் அசோக் வீட்டில் இரண்டாவது நாளாக வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், காந்தி கிராமத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய உறவினரான சங்கர் ஆனந்த் என்பவரின் நிறுவனத்தில் பணிபுரியும் ஷோபனா, பிரேம்குமார் தம்பதியினர் வீடு உட்பட 22 இடங்களில் இரண்டாவது நாளாக சோதனை நடைபெறுகிறது. அசம்பாவிதங்களை தவிர்க்க, மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரோடு, நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதவிர, கோவை கோல்டு வின்ஸ் பகுதியில் செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான செந்தில் கார்த்திகேயனின் வீடு, அவரது ரியல் எஸ்டேட் அலுவலகத்திலும் இரண்டாவது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. இதேபோல ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள செந்தில் பாலாஜியின் நண்பர் அரவிந்தின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடைபெறுகிறது. அப்போது அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட விலை உயர்ந்த சொகுசு காரான லீ கூப்பர் காரிலும் அதிகாரிகள் சோதனையிட்டனர். காரில் உள்ள சீட்டுகளை தூக்கி பார்த்தும், நகர்த்தியும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தொண்டாமுத்தூரில் அரவிந்தின் மனைவி காயத்ரி நடத்தி வரும் போதை மறுவாழ்வு மையத்திலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
பொள்ளாச்சி அருகே பணப்பட்டி கிராமத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர் நடத்தி வரும் கல்குவாரி மற்றும் எம்சாண்ட் யூனிட்களில் வருமானவரி சோதனை நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் 7 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெறும் நிலையில், இந்த சோதனை நாளையும் நீடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஈரோடு செங்கோடம்பள்ளத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி நண்பரான சச்சிதானந்தம் வீட்டில் இரண்டாவது நாளாக சோதனை நடைபெறுகிறது. இவர் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானங்களை ஏற்றி செல்லும் வாகனங்களை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்க: கர்நாடகா தேர்தலில் பாஜகவின் பங்களிப்பு குறித்து கருத்து - கொலை மிரட்டல் வருவதாக எஸ்.வி.சேகர் பரபரப்பு புகார்
அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் வீட்டில் நேற்று சோதனை நடத்த முயன்ற போது திமுகவினரால் தாக்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள வருமானவரித் துறை அதிகாரிகள் காயத்ரி, சுனில் குமார், பங்கஜ் குமார், கல்லா சீனிவாசராவ் ஆகியோருக்கு மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கரூரில் நடைபெற்ற வருமானவரி சோதனையின் போது அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத 50 க்கும் மேற்பட்ட திமுகவினர் மீது கரூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று தன்னை தாக்கியதாக திமுக தொண்டர் முருகன் கொடுத்த புகாரின் பேரில் வருமானவரித்துறை அதிகாரி காயத்ரி உள்ளிட்ட 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Senthil Balaji