ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர். என். ரவி. ஒப்புதல் அளிக்கமால் திருப்பி அனுப்பினார். இதனை தொடர்ந்து, அம்மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்ப அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான வியாழக்கிழமை, ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி, கடந்த 6-ந்தேதி திருப்பி அனுப்பிய தமிழ்நாடு இணைய வழி சூதாட்டத்தை தடை செய்தல் மற்றும் இணைய வழி விளையாட்டுக்களை ஒழுங்கு முறைப்படுத்துதல் சட்ட மசோதாவை மறு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனுமதி கோரினார்.
இதற்கு சபாநாயகர் அப்பாவு அனுமதி அளித்ததை தொடர்ந்து பேசிய முதலமைச்சர், இணையவழி சூதாட்டத்தில் ஈடுபட்டு, பணத்தை இழந்த 41 பேர் தற்கொலை செய்து கொண்டது குறித்த வேதனையோடு தனது உரையை தொடங்குவதாக கூறினார். இணைய வழி விளையாட்டு பாதிப்பு குறித்து ஆசிரியர்களிடம் கருத்து கேட்ட போது, மாணவர்களின் ஒரு முகப்படுத்தும் திறனில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக 74 சதவீதம் ஆசிரியர்களும், மாணவர்களின் நுண்ணறிவு ஈவு, எழுதும் திறன் மற்றும் படைப்பாற்றலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக 64 சதவீதம் ஆசிரியர்களும் கூறியதாக முதலமைச்சர் பேரவையில் தெரிவித்தார். பொதுமக்கள் பெரும்பாலானோர் ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு எதிரான கருத்துக்களையே கூறியதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்
ஏற்கனவே சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட மசோதாவை ஆளுநர் 131 நாட்கள் கழித்து சில குறிப்புகளுடன் திருப்பி அனுப்பி வைத்திருப்பதாக கவலை தெரிவித்த முதலமைச்சர், ஆளுநர் எழுப்பியுள்ள கேள்விகளும், அதற்கான பதில்களும் அமைச்சரவையில் கூட்டத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக கூறினார்.
ஆளுநர் திருப்பி அனுப்பியச் சட்டம் அறிவால் மட்டுமல்ல, இதயத்தால் உருவாக்கப்பட்டது என்றும் முதலமைச்சர் கூறினார்
மாநில பிரச்னைகளில் முடிவெடுக்க மாநில அரசுக்கு உரிமை உண்டு என குறிப்பிட்ட முதலமைச்சர், இனியொரு உயிர் பறிக்கப்படாமல்; இனியொரு குடும்பம் நடுத்தெருவில் நிற்காமல்; இருக்க அனைத்து உறுப்பினர்களும் சட்ட முன்வடிவை ஆதரிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
பின்னர் மசோதா மீது அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ.க்களும் பேசினர் இதனை தொடர்ந்து மசோதா ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இந்த நிலையில் டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியுள்ளார். ஆன்லைன் ரம்மி தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என அனுராக் சிங் தாகூர் தெரிவித்துள்ள நிலையில் ஆளுநர் ரவி உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.