9 நாள் அரசு முறை பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இன்று காலை புறப்பட்டுச் சென்றார். இதற்காக சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சருக்கு அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் 2,95,000 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் உறுதி செய்யப்பட்டிருப்பதாகக் கூறினார். அதன் தொடர்ச்சியாக வரும் ஜனவரி மாதம் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளதாகத் தெரிவித்தார். இந்த மாநாட்டில் பங்கேற்க முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்க சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு செல்வதாகவும், வெளிநாடு பயணத்தின்போது புதிய தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் தொழில்துறைக்கு முதலீடுகளை ஈர்த்தல் என்ற பெயரில் மீண்டும் சுற்றுலா மேற்கொண்டிருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடன் முதலமைச்சர் ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதாகக் கூறி துபாய்க்கு சுற்றுலா சென்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
துபாய் சுற்றுப்பயணத்தின் போது 6000 கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக முதலமைச்சர் கூறியதாகவும், ஆனால், 700 நாட்கள் கடந்தும் இதுவரை எந்த முதலீடும் வந்ததாகத் தெரியவில்லை என்றும் சாடியுள்ளார். இந்நிலையில், முதலமைச்சர் மீண்டும் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு தொழில் முதலீடுகளை ஈர்த்தல் என்ற பெயரில் சுற்றுலா சென்றிருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.