முகப்பு /செய்தி /தமிழ்நாடு / நானும் டெல்டாகாரன் தான்... நிலக்கரி சுரங்கத்துக்கு அனுமதியில்லை- முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

நானும் டெல்டாகாரன் தான்... நிலக்கரி சுரங்கத்துக்கு அனுமதியில்லை- முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

நானும் டெல்டாகாரன்தான். டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்க அனுமதி அளிக்கப்படாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Chennai, India

டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க எந்த விதத்திலும் தமிழக அரசு நிச்சயம் அனுமதி வழங்காது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில், டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் நடத்த ஆய்வு மேற்கொள்வது தொடர்பாக மத்திய அரசு அழைப்பாணை விடுத்திருப்பதை தொடர்ந்து, தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், பா.ம.க, விசிக, ம.தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சியினர் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

அந்த தீர்மானத்தின் மீது பேசிய திமுக உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா, ‘மாநில அரசின் எந்தவித கவனத்திற்கு கொண்டுவராமலும் தன்னிச்சையாகவும் மத்திய அரசு நிலக்கரி எடுப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுருப்பதாக பேசினார். காவிரி டெல்டா பகுதியில் ஆய்வு செய்தல் மற்றும் பிரித்தெடுத்தல் கூடாது என ஏற்கனவே சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று வந்துள்ள அறிவிப்பு சட்டத்திற்கு புறம்பானது என்பதால் அந்த அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அ.தி.மு.க உறுப்பினர் காமராஜ், ‘காவிரி டெல்டா பகுதியில் விவசாயத்தை தவிர எந்த தொழிற்சாலைகளும் வரக்கூடாது என்பதால் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக எடப்பாடி பழனிசாமி அறிவித்ததாகவும், அதற்காக அவருக்கு பாராட்டு விழா நடத்திய விவசாயிகள் காவிரி காப்பாளன் பட்டத்தை வழங்கியதாகவும் பேசினார். டெல்டா பகுதிகளில் நிலக்கரி எடுப்பதற்கு ஓராண்டாக நடைபெறும் டெண்டர் நடவடிக்கை திமுக அரசுக்கு தெரியாமல் போனது எப்படி எனவும் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் செல்வப் பெருந்தகை, ‘மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் அனைத்தும் தமிழக மக்களுக்கு எதிரானது என்பதற்கு இந்த திட்டம் ஒரு உதாரணம் என பேசினார். வேளாண் மண்டலம் என தெரிந்தும் தமிழக அரசை கலந்து ஆலோசிக்காமல் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது ஜனநாயக படுகொலை எனவும் முதலமைச்சர் கடிதத்திற்கு மதிப்பளித்து அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும் செல்வபெருந்தகை கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய அதிமுக உறுப்பினர் வைத்தியலிங்கம், ‘காவிரி டெல்டா வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீத்தேன், நிலக்கரி ஆகியவற்றை எடுக்க முடியாது என பேசினார். கொந்தளித்து போயிருக்கும் மக்களின் பதற்றத்தை தவிர்க்கும் வகையில் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் எனவும் வைத்திலிங்கம் பேசினார்.

இதே கருத்தை வலியுறுத்தி பாமக உறுப்பினர் ஜி.கே.மணி, விசிக உறுப்பினர் சிந்தனைச் செல்வன், ஆகியோர் தங்கள் கருத்துக்களை பதிவுசெய்தனர்.

இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ’முதலமைச்சர் எவ்வளவு வேகமாக செயல்பட்டு உடனடியாக பிரதமரின் கவனத்தை ஈர்த்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும் என பேசினார். அதிகாரிகளும் மத்திய அரசன் நிலக்கரி துறையை தொடர்பு கொண்டு அடுத்தகட்ட மேல்நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் என பேசியிருப்பதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார். தமிழ்நாடு அரசு ஒருபோதும் இத்திட்டத்தை அனுமதிக்காது என்பதை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றிருப்பதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார்.

நிலக்கரி சுரங்க அறிவிப்பு - சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்த தி.மு.க எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா

அமைச்சரின் விளக்கத்திற்கு பிறகு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘இந்த செய்தியை கண்டு உறுப்பினர்களை போலவே தானும் அதிர்ச்சிக்குள்ளானேன் எனவும், செய்தி வெளியானதும் தொடர்புள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பிரதமருக்கு கடிதம் எழுதியதாகவும் பேசினார்.

மேலும் அந்த கடிதத்தை டி.ஆர்.பாலு மூலம் சம்பந்தபட்ட அமைச்சருக்கு வழங்க அறிவுறுத்திய நிலையில், தொலைபேசி மூலம் பேசிய டி.ஆர்.பாலுவிடம் முதலமைச்சரின் கடிதத்தின் மீது நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக மத்திய அமைச்சர் உறுதியளித்திருப்பதாகவும் முதலமைச்சர் பேசினார்.

நானும் டெல்டாக் காரன்தான், உறுப்பினர்கள் உறுதியாக இருப்பதைப் போலவே, நானும் உறுதியாக இருப்பேன் என பேசிய முதலமைச்சர், டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்க தமிழக அரசு நிச்சயம் அனுமதி வழங்காது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

First published:

Tags: MK Stalin