கேரளா மாநிலம், வைக்கம் கடற்கரை மைதானத்தில் கேரள அரசின் சார்பில் நடைபெற்ற வைக்கம் நூற்றாண்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அந்த நிகழ்வில் பேசிய மு.க.ஸ்டாலின், ‘நாகர்கோவிலில் நடந்த தோள்சீலை போராட்டத்தின் 200 ஆவது ஆண்டு விழாவில் நானும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் கலந்து கொண்டோம். அக்கூட்டத்தில் பேசிய நான் - வைக்கம் போராட்டம் நடந்து 100 ஆண்டுகள் ஆகப் போகிறது. தமிழ்நாடு அரசும், கேரள அரசும் இணைந்து வைக்கம் நூற்றாண்டு வெற்றிவிழாவைக் கொண்டாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன். எனக்குப் பிறகு பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அதனை உறுதிப்படுத்தி பேசினார்கள்.
நாங்கள் நடத்துகிறோம் - நீங்கள் வருகை தாருங்கள் என்று எனக்கு அந்த மேடையில் வைத்தே அழைப்பு விடுத்தார்கள். உடலால் நாம் வேறு வேறு என்றாலும் உணர்வால் ஒருவர் என்பதை அந்த மேடையிலேயே பினராய் விஜயன் நீரூபித்தார்கள். சில நாட்களில் வைக்கம் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.
மரியாதைக்குரிய சகோதரர் பினராய் விஜயன் அழைத்து நான் இதுவரை வராமல் இருந்தது இல்லை. தமிழ்நாட்டில் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டு இருக்கிறது. என்றாலும் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவுக்கு நிச்சயம் சென்றாக வேண்டும் என்று நான் இங்கே வந்துள்ளேன். வைக்கம் - என்பது இப்போது கேரள மாநிலத்தில் இருந்தாலும் தமிழ்நாட்டுக்கு எழுச்சியை, உணர்ச்சியை ஏற்படுத்திய ஊர் ஆகும்.
1924-ம் ஆண்டு வைக்கத்தில் நடந்த போராட்டம் என்பது கேரளாவின் சமூகநீதி வரலாற்றில் மட்டுமல்ல தமிழ்நாட்டு சமூகநீதி வரலாற்றிலும் மகத்தான போராட்டம் ஆகும். இன்னும் சொன்னால் இந்தியாவுக்கே வழிகாட்டிய போராட்டமாக இது அமைந்துள்ளது. வைக்கம் போராட்டம் தான் மகர் போராட்டத்தை நடத்துவதற்கு எனக்குத் தூண்டுதலாக அமைந்திருந்தது என்று அண்ணல் அம்பேத்கர் பிற்காலத்தில் எழுதினார்கள்.
வைக்கம் போராட்டத்தின் தூண்டுதலால் தான் தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களில் அண்ணல் காந்தியடிகள் அதிகம் கவனம் செலுத்தினார்கள். தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஈரோட்டிலும் சுசீந்திரத்திலும், திருவண்ணாமலையிலும் மதுரையிலும், திருச்சியிலும், மயிலாடுதுறையிலும் கோவில் நுழைவுப் போராட்டங்களை நடத்துவதற்கான தூண்டுகோலாக இருந்தது வைக்கம் போராட்டம் தான்.
எனவே சுயமரியாதை - சமூகநீதிப் போராட்டத்தின் தொடக்கமான வைக்கம் மண்ணில் - நிற்பதை நான் பெருமையாகக் கருதுகிறேன். வெற்றிப் பெருமிதத்துடன் நான் நிற்கிறேன். சூத்திரர்கள் என்றும் பஞ்சமர் என்றும் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களைத் தலைநிமிர வைக்க கேரளத்திலும் தமிழ்நாட்டிலும் சீர்திருத்த இயக்கமானது பல்லாண்டு காலமாகச் செயல்பட்டு வருகிறது. இதனைச் சீர்திருத்த இயக்கமாக மட்டுமே சுருக்கிச் சொல்லி விட முடியாது. இவை தான் புரட்சி இயக்கங்கள் ஆகும். கேரளாவில் புரட்சி இயக்கம் என்பது நாராயணகுரு, டாக்டர் பால்பு பத்மநாபன், குமாரன் ஆசான், அய்யங்காளி, டி.கே.மாதவன் - ஆகிய தலைவர்களால் வரிசையாக நடத்தப்பட்டது ஆகும்.
தமிழ்நாட்டு புரட்சி இயக்கமானது இராமலிங்க வள்ளலார், வைகுண்டசாமி, அத்திப்பாக்கம் வெங்கடாசலனார், பண்டித அயோத்திதாசர், டி.எம்.நாயர், தந்தை பெரியார் ஆகிய தலைவர்களால் வரிசையாக நடத்தப்பட்டது ஆகும். இதில் கேரளாவைச் சேர்ந்த டி.கே.மாதவனும், தமிழ்நாட்டைச் சேர்ந்த தந்தை பெரியாரும் இணைந்து நடத்திய வெற்றிப் போராட்டம் தான் வைக்கம் போராட்டம் ஆகும்.
வைக்கம் கோவில் தெருவில் ஒடுக்கப்பட்ட சமூகத்து மக்கள் நடத்து செல்லத் தடை விதிக்கப்பட்டதை உடைக்க தீண்டாமை ஒழிப்புக் குழு அன்றைய காங்கிரசு கட்சித் தலைவர்களால் அமைக்கப்பட்டது. 1924 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் தேதி அன்று தடையை மீறி அந்த தெருவுக்குள் நுழையும் சத்தியாகிரகம் தொடங்கப்பட்டது. தொடர்ச்சியாக காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டார்கள். முக்கியமான 19 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் - இந்தப் போராட்டமே இனி நடக்காது என்ற நிலைமை உருவானபோது தான் -அந்த நேரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த தந்தை பெரியாருக்கு கேரள தலைவர்கள் கடிதம் எழுதி வர வைக்கிறார்கள்.
'நீங்கள் வந்து இந்த போராட்டத்துக்கு உயிரூட்ட வேண்டும்' என்று அந்தக் கடிதத்தில் இருந்தது. உடனடியாக பெரியார் இங்கு வந்துவிட்டார்கள். எந்த மன்னருக்கு எதிராக இந்தப் போராட்டம் நடத்துவதற்காக பெரியார் இங்கு வந்தாரோ, அந்த மன்னர் ஆட்சியே அவருக்கு பெரிய வரவேற்பைக் கொடுத்தது. ஏனென்றால் அந்த மன்னர் குடும்பத்துக்கு பெரியாரை நன்கு தெரியும். ஈரோடு வந்தால் மன்னர் குடும்பத்தினர் பெரியாரின் வீட்டில் தான் தங்குவார்கள். அந்தளவுக்கு நட்பாக இருந்துள்ளார்கள்.
ஆனாலும் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் மன்னருக்கு எதிராகவே போராடினார் தந்தை பெரியார். கேரளா முழுவதும் பிரச்சாரம் செய்தார். மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அதனாலேயே தந்தை பெரியாரையும், கோவை அய்யாமுத்துவையும் கூட்டம் பேசுவதற்கு தடை விதித்தார்கள். தடையை மீறி பேசியதற்காக கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.
விடுதலை செய்யப்பட்ட பிறகும் - நேராக ஊருக்குத் திரும்பாமல் வைக்கம் சென்று மீண்டும் போராடினார் பெரியார். மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். தந்தை பெரியாருக்கு என்ன சிறப்பு என்றால் - இந்த போராட்டத்தில் கைதான மற்ற தலைவர்கள் அனைவரும் அரசியல் கைதிகளாக நடத்தப்பட்டார்கள்.
ஆனால் பெரியாரை மிகமோசமாக நடத்தினார்கள். கையிலும் காலிலும் விலங்கு போட்டு கழுத்தில் மரப்பலகையை மாட்டி அடைத்து வைத்திருந்தார்கள். இதே போராட்டத்தில் கைதாகி சிறையில் இருந்த தலைவர்களில் ஒருவரான கே.பி.கேசவமேனன் 'பந்தனத்தில் நின்னு' என்ற தலைப்பில் மலையாளத்தில் ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். அதன் சில வரிகளை மட்டும் நான் படிக்கிறேன்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும் -ஈரோடு முனிசிபல் கவுன்சிலின் சேர்மனாக இருந்தவரும் -ஒரு பெரும் பணக்காரரும் - உத்தம தேசாபிமானியுமான - ஈ.வெ.ராமசாமிக்கு காலில் சங்கிலி மாட்டப்பட்டு இருந்தது. கைதிகளது தொப்பி மாட்டப்பட்டு இருந்தது. முழங்கால் வரையில் வேட்டி அணிந்திருந்தார்.
கழுத்தில் மரக்கட்டையை மாட்டி கொள்ளைக்காரர்கள் மற்றும் கொலைகாரர்களுடன் வைக்கப்பட்டுள்ளார். கேரளாவின் தீண்டாமைச் சாதிக்காரர்களது சுதந்திரத்துக்காக தமிழ்நாட்டின் மேல்குலத்தைச் சேர்ந்த இந்து ஒருவர் இப்படிப்பட்ட தியாகத்தைச் செய்தது எங்களுக்கு புத்துயிர் தந்தது என்று கே.பி.கேசவமேனன் எழுதி இருக்கிறார்கள்.
தந்தை பெரியார் மட்டுமல்ல - தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான தியாகிகள் இங்கு வந்து போராடினார்கள். பெரியாரின் மனைவி நாகம்மையாரும், சகோதரி கண்ணம்மாளும் இங்கேயே வந்து தங்கி போராடினார்கள். பெரியார் 74 நாட்கள் இங்கே சிறையில் இருந்தார்கள். 67 நாட்கள் கேரளாவில் தங்கி போராடினார்கள். மொத்தம் 141 நாட்கள் வைக்கம் போராட்டத்துக்கு தன்னை ஒப்படைத்துக் கொண்டார்.
காங்கிரஸ் தலைவர் என்கிற அடிப்படையில் அண்ணல் காந்தியடிகளை, ராணி பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். இந்த போராட்டத்துக்கு தலைமை வகித்தவர் என்ற அடிப்படையில் பெரியாருடன் பேசி முடிவெடுத்துவிட்டுத் தான் காந்தியும் ராணியுடன் பேச்சுவார்த்தை நடத்தச் சென்றார்.
'கோயிலுக்குள் நுழைவோம் - என்று ஈ.வெ.ராமசாமி சொல்வதை நிறுத்தச் சொல்லுங்கள். தெருவைத் திறந்து விடுகிறோம் என்று ராணி சொல்ல -அதனை பெரியாரிடம் வந்து காந்தியடிகள் சொல்ல -'நமது இறுதி இலக்கு கோயில் நுழைவு தான் என்றாலும் - இப்போதைக்கு முதல் கட்ட வெற்றியை பெறுவோம்' என்று பெரியார் சொன்னார்கள்.
அதனடிப்படையில் வைக்கம் கோயில் சாலைகள் அனைவருக்கும் திறந்து விடப்பட்டது. இதன் வெற்றி விழா வைக்கத்தில் நடந்தபோதும் மறக்காமல் பெரியாரை அழைத்து பாராட்டினார்கள் கேரளத்து தலைவர்கள். அந்த வகையில் 100 ஆண்டுகள் கழித்தும் தமிழ்நாட்டை மறக்காமல் எங்களை அழைத்துள்ளார் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன்.
3வது முறையாக கைது... 23 மாதங்களாக சிறைப்பறவையாக வலம் வரும் ஹரிநாடார்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.