சென்னை மாநகராட்சியில் மக்களை தேடி மேயர் திட்டத்தின் முதல் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ராயபுரம் மண்டலத்தில் தொடங்கப்பட்டது.
சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் பொதுமக்களின் குறைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் மக்களைத் தேடி மேயர் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. மக்களை தேடி மேயர் திட்டத்தின் முதல் சிறப்பு கூட்டம் சென்னை ராயபுரத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலை வசதி, மழைநீர் வடிகால் வசதி, மின் விளக்கு, கழிப்பிடம், பிறப்பு இறப்பு சான்றிதழ், வரி விதிப்பு, குப்பைகள் அகற்றம், பூங்காக்கள் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் மற்றும் குறைகள் குறித்து தெரிவிக்கலாம் எனவும் மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என கூறப்பட்டிருந்தது.
மனு அளிக்க வரும் பொது மக்கள், தங்களது பெயரை பதிவு செய்து ரசீது பெற்று கொண்ட பின்னர் மேயரை சந்திக்கவும், புகாரினை மாநகராட்சி பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
ராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட வார்டுகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மேயரை நேரடியாக சந்தித்து அடிப்படை பிரச்னைகள் குறித்தும், அவர்களுக்கு தேவையான உதவிகளை குறித்தும் மனு அளித்தனர். மாநகராட்சி தொடர்பான சில மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டன. மாநகராட்சி தொடர்பில்லாத மற்ற துறை புகார்கள் உரிய துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த திட்டத்தின் படி, 15 நாட்களுக்கு ஒரு முறை என அனைத்து மண்டலங்களிலும் மக்களை சந்தித்து மனுக்களை பெறுவது மட்டுமின்றி, அதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும் எனவும் , சென்னை மாநகராட்சி வலைதளத்தில் அவர்கள் கொடுத்துள்ள மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மக்கள் அறிந்துகொள்ளலாம் எனவும் மேயர் பிரியா தெரிவித்தார்.
இதையும் வாசிக்க: தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கேழ்வரகு வழங்கும் திட்டம் இன்று தொடக்கம்..
மேலும்,இந்த திட்டத்தை மக்களின் வாழ்விட பகுதிகளில் நடத்துவது மற்றும் மக்கள் சந்திப்பு நாட்கள் இடைவெளியை குறைப்பது குறித்தும் பரிசீலனை செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இந்நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு, துணை மேயர் மகேஸ் குமார், ராயபுரம் எம்எல்ஏ ஐடிரீம்ஸ் மூர்த்தி, மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் பங்கேற்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai Mayor, TN Govt