நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், ஒவ்வொரு பூத்திற்கும் ஒரு கமிட்டி அதற்கு தலைவர், செயலாளர் என, 1.32 லட்சம் தொண்டர்களுக்கு புதிதாக பதவி கொடுக்க திட்டமிட்டுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
கடுமையான போராட்டங்களுக்கு பிறகு அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தொடர் தேர்தல் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் தொண்டர்களை உற்சாகமூட்ட வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். ஓராண்டிற்குள் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் அதிமுக இருக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்திலுள்ள 39 தொகுதிகளில் தேனி தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
கடந்த இரண்டாண்டுகளாக திமுக ஆட்சியின் மீது அதிருப்தியில் உள்ள மக்களின் வாக்குகள், ஆளுநர் மற்றும் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகளால் ஆட்சிக்கு எதிராக கிளப்பப்படும் குற்றச்சாட்டுகள் மூலம் கிடைக்கும் வாக்குகளை அதிமுகவிற்கான வாக்குகளாக மாற்ற முயற்சிக்கிறது. ஆனால், தங்களின் மீதான குற்றச்சாட்டுகள், விமர்சனங்களை புறந்தள்ளி, கூட்டணி பலம், அதிகாரப் பலத்தின் மூலம் தங்களது செல்வாக்கை நிரூபித்துக் காட்டக் கூடிய தேர்தலாக நாடாளுமன்ற தேர்தலை திமுக கருதுகிறது. ஒற்றைத் தலைமையை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமியும், வெற்றித் தலைமை என ஊர்ஜிதப்படுத்த ஸ்டாலினும், நாடாளுமன்ற தேர்தல் களத்தை பயன்படுத்திக் கொள்ள எத்தனிக்கின்றனர். மேலும் இருதரப்பினருமே நாடாளுமன்ற தேர்தல் முன்னெடுப்பு பணிகளை தற்போதே தீவிரமாக துவங்கி விட்டனர்.
'தேர்தல்' பதவிகள்
ஒரு கோடி உறுப்பினர் சேர்க்கை என திமுகவும், 50 லட்சம் உறுப்பினர் சேர்க்கை என அதிமுகவும் தீவிர உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், திமுகவில் ஒவ்வொரு, 100 வாக்காளர்களுக்கும் ஒரு பொறுப்பாளரை நியமித்து, அதற்கேற்ப இளைஞரணி, மகளிரணி, தகவல் தொழில்நுட்ப அணியினரை உள்ளடக்கிய பூத் கமிட்டியை அமைத்துள்ளனர்.இப்பணிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில், தற்போது ஆங்காங்கே பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதுபோலவே, அதிமுக சார்பிலும் பூத் கமிட்டி அமைப்பதற்கான பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு முந்தைய தேர்தல்களில் இல்லாத அளவுக்கு, தற்போது அதிமுகவின் பூத் கமிட்டி நிர்வாக அமைப்பில் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. 750 முதல், 1,250 வாக்காளர்களுக்கு, 19 பேர் கொண்ட ஒரு பூத் கமிட்டி அமைக்கப்படுகிறது.
அதில், இளைஞர், இளம்பெண் பாசறையைச் சேர்ந்த, 5 பேர், மகளிரணியைச் சேர்ந்த, 5 பேர், தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த, 2 பேர் கட்டாயம் இடம்பெற வேண்டும் எனவும், ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே பூத் கமிட்டி உறுப்பினராக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்குமுன், பூத் கமிட்டி உறுப்பினர்கள் அந்தந்த வட்ட, ஒன்றியச் செயலாளர்களின் நேரடி ஒருங்கிணைப்பின்கீழ் செயல்படுவர். அப்போது அவர்களுக்கு பணிச்சுமை அதிகரிப்பதாகவும், கண்காணிப்பில் தொய்வு ஏற்படுவதாகவும் கூறப்பட்டது. இதைத்தவிர்க்க, அந்தந்த பகுதியில் இருப்பவர்களே பூத் கமிட்டியை ஒருங்கிணைத்து, பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி ஒவ்வொரு பூத் கமிட்டிக்கும் தலா, ஒரு தலைவர், ஒரு செயலாளரை நியமிக்குமாறும், மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறும், மாவட்டச் செயலாளர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, திருச்சி உட்பட அனைத்து மாவட்டங்களிலும் தற்போது இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
மைக்ரோ லெவல்
இதுகுறித்து அதிமுகவின் மாநில நிர்வாகிகள் சிலரை கேட்டபோது, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் குறைந்த வாக்கு சதவீதத்தில் மட்டுமே தோல்வியடைந்த நிலையில், இந்த மக்களவைத் தேர்தலை முக்கியமானதாகக் கருதி, 'மைக்ரோ லெவல்' செயல் திட்டங்களுடன் களம் இறங்குகிறோம். இதுதொடர்பாக பொதுச்செயலாளர் பழனிசாமி அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார்.
அதன்படி, தமிழகத்திலுள்ள அனைத்து தொகுதிகளிலும் சுமார், 66,000 பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. குறைந்தபட்சம், 50 வாக்காளர்களுக்கு ஒருவர் வீதம் பொறுப்பாளர்ள் நியமிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு பூத் கமிட்டியிலும், 19 பேர் வீதம் இடம் பெறுகின்றனர். இந்த கமிட்டிக்கு முதல்முறையாக தலைவர், செயலாளர் பதவிகள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே கட்சி நிர்வாகிகளாக உள்ளவர்கள் பூத் கமிட்டியில் நியமிக்கப்பட மாட்டார்கள் என்பதால், இந்த புதிய நடைமுறையின் மூலம் அதிமுகவில் புதிதாக சுமார் 1.32 லட்சம் தொண்டர்களுக்கு பதவி கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஒன்றிய, வட்டச் செயலாளர்களுக்கு கீழ், அங்கீகாரம் மிக்க பதவி என்பதால் இதற்கு கட்சியினரிடத்தில் வரவேற்பும், உற்சாகமும் கிடைத்துள்ளது என்கின்றனர். இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் பணிக்கான, 1.32 லட்சம் புதிய பதவிகள் அதிமுகவிற்கு தேறுதலை தருமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.