முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக சென்னை வடபழனியில் உள்ள 1,000 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரைப்பட நடிகை கஸ்தூரி பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதையடுத்து விழாவில் பேசிய கஸ்தூரி, ‘இந்த விழாவிற்கு என்னை அழைத்த போது நான் கூறிய முதல் விஷயம் நான் தமிழகத்திலேயே இல்லை. குடும்பத்தோடு ஹைதராபாத்தில் தங்கி உள்ளேன். தெலுங்கில் தான் அதிக படம் நடித்து வருகிறேன். அதிமுகவில் நான் உறுப்பினர் அல்ல. ஆனால் எனக்கு ஓட்டுரிமை வந்ததிலிருந்து நான் அதிமுகவிற்கு தான் ஓட்டு போட்டு வருகிறேன். விஜயகாந்த் கட்சி தொடங்கிய போது ஒரே ஒரு முறை அவருக்கு வாக்களித்துள்ளேன்.
பெண் குழந்தைகள் கல்லூரி படிப்பைத் தொடருவதற்கான திட்டத்தை முதலில் துவக்கி வைத்தவர் ஜெயலலிதா. தாலிக்கு தங்கம், அம்மா உணவகம் போன்ற நலத்திட்டங்களை தொடக்கி வைத்தவர் ஜெயலலிதா. பெண்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்த ஜெயலலிதா தற்போது நம்முடன் இல்லை. அவர் தெய்வமாகிவிட்டார். அவரை நாம் தெய்வமாக வணங்க வேண்டும்.
இதையும் படிக்க : மக்களைப் பற்றி அக்கறை இல்லை... மதுவிற்கு தானியங்கி இயந்திரமா? - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
கட்சியை பார்த்து நலத்திட்ட உதவிகள் வழங்காமல் தேவையை அறிந்து உதவி வழங்குவது அதிமுகவின் சித்தாந்தத்தில் உள்ளது. மதுபான கடைகளை அகற்ற வேண்டும் என்று கட்சியை கடந்து நான் நிறைய விமர்சித்து உள்ளேன். திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மதுவை வழங்கலாம் என்று இப்போதுள்ள அரசு அறிவித்துள்ளது. அதை திமுக கட்சிக்காரர்களே விமர்சித்த பிறகு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்கள். ஆனால் வாபஸ் வாங்கவில்லை. ஆகவே மக்கள் விழிப்புணர்வோடு இருந்தால் தான் இம்மாதிரியான அநியாயங்களை நிறுத்த முடியும்.
கடலில் பேனா சிலை வைப்பது பெரிது அல்ல. ஒவ்வொரு வீட்டிலும் உள்ள குழந்தைகள் பேனாவை கையில் பிடிக்க வேண்டும். கலைஞரை நினைவு கூற வேண்டும் என்றால் நூலகங்கள் அமைக்கலாம். அதை விட்டுவிட்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கடலில் பேனா வைக்கிறீர்கள். பேனாவை உங்கள் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாமே.
சினிமாவில் வேலை செய்பவர்களுக்கு தெரியும் எந்த நேரத்தில் வேலை செய்ய வேண்டும் என்றாலும், அதற்கு ஏற்ற வசதிகளை செய்து கொடுத்தாலும் கூட அங்கு வேலை செய்வது மிகவும் கடினம். அப்படி இருக்கும் பொழுது தொடர்ச்சியாக ஓய்வு இல்லாமல் 12 மணி நேரம் தொழிலாளர்களாக எப்படி வேலை செய்ய முடியும்? நான்கு நாட்கள் பட்டினியாக இருந்துவிட்டு மூன்று நாட்கள் சேர்த்து சாப்பிட முடியுமா அதைப் போலத்தான் அரசாங்கத்தின் 12 மணி நேர வேலை திட்டம். இது சாதாரண மக்களுக்கு எப்படி பயனளிக்கும்’ என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.