கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் பாலியல் வன்கொடுமை தொடர்பாக சட்டப்பேரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன், காங்கிரஸ் கட்சியின் செல்வ பெருந்தகை, பாமக உறுப்பினர் அருள் ஆகியோர் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
அப்போது பேசிய விசிக சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி, கலாஷேத்ரா கல்லூரியில் இது போன்ற நிகழ்வுகள் நடப்பது புதிதல்ல, தமிழ்நாட்டில் செயல்படும் பல்வேறு ஒன்றிய அரசின் நிறுவனங்களில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது போன்ற சம்பவங்கள் நடைபெறும் போது காவல்துறை கூட சற்று மென்மையான போக்கை கடைபிடிக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு ஆதரவாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறினார்.
இந்த சிறப்பு கவன தீர்மானத்திற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “ஒன்றிய அரசின் கலாச்சாரத் துறையின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கும் கலாஷேத்ரா கல்லூரி மீது தேசிய மகளிர் ஆணையம் முதலில் தானாக முன்வந்து பாலியல் தொல்லை என ட்விட்டர் செய்தி போட்டு 21-3-2023 அன்று நடவடிக்கை எடுக்கக்கோரி டிஜிபிக்கு கடிதம் எழுதியது. இதுதொடர்பாக கலாஷேத்ரா நிர்வாகிகள் நமது மாநில காவல்துறை நிர்வாகிகளை சந்தித்து. அப்போது அந்நிறுவனத்தில் பாலியல் புகார் ஏதும் இல்லை என தெரிவித்தனர்.
இதையும் படிக்க : கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் புகார் : முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய கல்லூரி மாணவிகள்!
பின்னர் தேசிய மகளிர் ஆணையமே தாங்கள் டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி அடிப்படையில் அவ்வாறு செய்தி அறிவித்தோம். அந்த விசாரணையை முடித்து விட்டோம் என 25-3-2023 அன்று டிஜிபிக்கு கடிதம் எழுதி இருந்தனர். பின்னர் 29-3-2023 அன்று மீண்டும் தேசிய மகளிர் ஆணைய தலைவர் கலாஷேத்ரா கல்லூரிக்கு நேரில் வந்து அங்கு இருக்கக்கூடிய 210 மாணவிகளிடமும் விசாரித்து சென்றுள்ளார். அப்போது காவல்துறை தங்களுடன் வர தேவை இல்லை என்றும் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் காவல்துறைக்கு இதுவரை எழுத்துப்பூர்வமான புகார் ஏதும் கிடைக்கப்பெறவில்லை. இந்த நிலையில் மாணவிகள் நடத்திய உள்ளிருப்பு போராட்டத்தின் விளைவாக கலாஷேத்ரா பவுண்டேஷன் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு விடுதிகளை விட்டு மாணவிகள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்கள். இந்த விவகாரம் எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டவுடன் மாவட்ட ஆட்சித் தலைவரோடு தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்தேன். இந்த விஷயத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பாக மேலும் விவரங்கள் அறிவதற்காக வருவாய் கோட்ட அலுவலர் வட்டாட்சியர் காவல்துறை ஆணையர் மற்ற அலுவலர்களை அனுப்பி அங்கே விசாரணை மேற்கொண்டார்கள்.
இன்று காலையில் மீண்டும் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் அங்கே சென்று மாணவிகள் மற்றும் நிர்வாகத்தோடு பேசி வருகின்றனர். மேலும் அங்குள்ள மாணவிகளின் பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு அங்கு ஒரு பெண் ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் குழு பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். அரசை பொருத்தவரை இந்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொண்டு குற்றச்சாட்டு உறுதியானால் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய சட்டரீதியான நடவடிக்கை கட்டாயம் எடுக்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM MK Stalin, Sexual harassment, Students, Tamil Nadu, Tamil News, TN Assembly