மும்பை இந்தியன்ஸ் அணியில் பொலார்டு மற்றும் ஹர்திக் பாண்ட்யாவிற்கு மாற்று ஆட்டக்காரர்கள் யார் என்பது குறித்து முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்பதில் அளித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இம்மாத இறுதியில் தொடங்கவுள்ள நிலையில், மும்பை அணி அதற்கு ஆயத்தம் ஆகி வருகிறது. மும்பை அணிக்காக விளையாடி உலகம் முழுவதும் ரசிகர்களின் கவனத்தை பெற்ற ஹர்திக் பாண்ட்யா கடந்த ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக சென்று விட்டார்.
பாண்ட்யா கேப்டனாக செயல்பட்ட குஜராத் அணி முதல் சீசனிலேயே சாம்பியன் பட்டத்தை வென்று வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று மற்றொரு ஆல் ரவுண்டரான கிரோன் பொலார்டு ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இரண்டு அபாயகரமான ஆட்டக்காரர்கள் மும்பை அணியில் தற்போது இல்லாதது வெற்றிடத்தை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர்களின் இடத்தை யார் நிரப்புவார் என்பது குறித்து முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- நிச்சயமாக பொலார்டும், பாண்ட்யாவும் டி20 ஃபார்மேட்டில் மிகச்சிறந்த வீரர்களாக உள்ளனர். ஆட்டத்தின் எந்த நேரத்திலும் அவர்களால் முக்கியமான விளைவுகளை ஏற்படுத்தி விட முடியும்.
அவர்களைப் போன்ற வீரர்கள் அணியில் இருப்பது மன ரீதியிலும் சக வீரர்களுக்கு பலத்தை ஏற்படுத்தும். என்னைப் பொருத்தளவில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் டிம் டேவிட், கேமரூன் க்ரீன் ஆகியோர் பொலார்டு, பாண்ட்யா இடத்தை நிரப்புவார்கள் என்று நினைக்கிறேன். ஐபிஎல் போன்ற நீண்ட தொடரில் ஆதிக்கம் செலுத்துவதற்கு ஒரு அணி தொடக்க போட்டியில் இருந்தே சிறப்பாக விளையாட வேண்டும். அந்த திறமை மும்பை அணிக்கு இருக்கிறது என்று நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். ஏப்ரல் 2 ஆம் தேதி நடைபெறவுள்ள ஆட்டத்தில் மும்பை அணி தனது முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.