ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஐதராபாத்திற்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்று மும்பை அணி ப்ளே ஆஃப் சுற்றை நெருங்கியுள்ளது. வலுவான குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்பதால் ஆர்சிபி ரசிகர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத் – மும்பை மற்றும் பெங்களூரு – குஜராத் என 2 போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
மும்பையில் முதல் போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 5 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்தது. இது சற்று கடினமான இலக்காக முதலில் கருதப்பட்டாலும், சன்ரைசர்ஸ் அணியின் பலவீனமான பவுலிங் மற்றும் ரோஹித், கேமரூன் க்ரீனின் அதிரடி ஆட்டத்தால் மும்பை அணிக்கு எளிதானதாக மாறியது. 47 பந்துகளில் கேமரூன் கிரீன் 8 சிக்சர் மற்றும பவுண்டரியுடன் சதம் அடித்தார். 18 ஓவரில் மும்பை அணி 201 ரன்களை சேஸிங் செய்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 14 போட்டிகளில் விளையாடி மொத்தம் 16 புள்ளிகளைப் பெற்று பாயின்ட்ஸ் டேபிளில் 4 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
பெங்களூருவின் நிலை என்ன?
மும்பை அணி பெங்களூருவை விட அதிக புள்ளிகளைப் பெற்றிருந்தாலும் அதன் நெட் ரன் ரேட் -0.044 என்பது பெங்களூருவை விட (+0.180) குறைவாக இருக்கிறது. இதன் அடிப்படையில் தற்போது நடைபெற்று வரும் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்து விடும். தோல்வி அடைந்தாலோ அல்லது மழை குறுக்கிட்டு ஆட்டம் கைவிடப்பட்டாலோ மும்பை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும். முக்கியமான பல ஆட்டங்களில் சறுக்கிய அணி என்பதால் பெங்களூரு அணியின் ரசிகர்கள் பதற்றத்தில் உள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.