ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பிளே ஆப் சுற்று போட்டிகள் இன்று முதல் ஆரம்பம் ஆகிறது. இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள குவாலிஃபயர் 1 ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி, 4 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோத உள்ளது. இரு அணிகளும் சமபலம் மிக்கவை என்பதால் இந்த ஆட்டத்தை ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களே அதிகம் எதிர்பார்த்து உள்ளனர். இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. உள்ளூர் மைதானம் என்பதால் சென்னை அணிக்கு ஆதரவு மிக அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. அதில் சென்னை அணியை குஜராத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இன்றைய தினம் சென்னை அணி குஜராத் டைட்டன்சை வீழ்த்துமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். சென்னையில் வெயில் கொளுத்தி வரும் சூழலில், மழை பெய்வதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவாகவே உள்ளன. ஒருவேளை மழை பெய்தால் அல்லது ஆட்டத்தை மழை இடையூறு செய்தால் இன்றைய போட்டி முடிவு சூப்பர் ஓவர் முறையில் தீர்மானிக்கப்படும்.
இந்த முறை குவாலிஃபயர் 1, எலிமினேட்டர் மற்றும் குவாலிபயர் 2 ஆகிய போட்டிகளுக்கும் பொருந்தும். ஒருவேளை விளையாட கூட முடியாத அளவுக்கு மைதானம் பாதிக்கப்பட்டு இருந்தால், லீக் போட்டிகளின் அடிப்படையில் ரிசல்ட் தீர்மானிக்கப்படும். அந்த வகையில் இன்றைய ஆட்டம் ஒருவேளை கைவிடப்பட்டால், போட்டியில் அதிக புள்ளிகளை பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றதாக கருதப்பட்டு அந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். எலிமினேட்டர் சுற்றில் மும்பை மற்றும் லக்னே அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை நடைபெற உள்ளது. குவாலிபையர் 2 போட்டி வரும் வெள்ளியன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. அதே மைதானத்தில் வரும் ஞாயிறு அன்று இறுதிப்போட்டி நடத்தப்பட உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.