ஓய்வு குறித்து முடிவு எடுப்பதற்கு இன்னும் நீண்ட காலம் இருப்பதாகவும், தற்போது அதுபற்றி பேசி சென்னை அணியின் பயிற்சியாளருக்கு நெருக்கடி ஏற்படுத்த விரும்பவில்லை என்றும் சி.எஸ்.கே. கேப்டன் தோனி கூறியுள்ளார். ஐபிஎல் தொடரில் கடந்த சில சீசன்களில் இருந்தே, தோனி விரைவில் ஓய்வு பெறுவார், அடுத்த சீசனுடன் ஓய்வு பெறுவார் என்பது குறித்த பேச்சுகள் எழத்தொடங்கின. ஆனால் இதுபற்றி தோனி தரப்பில் எந்த பதிலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தோனி சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். கடந்த சீசனில் முதல் பாதியின்போது ரவிந்திர ஜடேஜா கேப்டனாக செயல்பட்டு வந்தார். அதற்கு போதிய பலன் கிடைக்காத நிலையில், மீண்டும் கேப்டனாக தோனி பொறுப்பேற்றுக் கொண்டார். ஒவ்வொரு முறை தோனி தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போதும் ஓய்வு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். தோனிக்கு தற்போது 41 வயது ஆகுவதால் இந்த கேள்வியை அவர் தவிர்க்க முடியாது என்பது இயல்பானதாகும். ஆனால் இந்த கேள்விகளுக்கு தோனி தரப்பில் உறுதியான பதில் ஏதும் தெரிவிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் சமீபத்தில் எழுப்பப்பட்ட ஓய்வு குறித்த கேள்விக்கு தோனி அளித்த பதிலில், ‘நான் ஓய்வு குறித்து முடிவு எடுப்பதற்கு இன்னும் நீண்ட காலம் இருக்கிறது. இப்போது நாங்கள் விளையாட நிறைய போட்டிகள் உள்ளன. இப்போது நான் ஏதாவது ஓய்வு பற்றி கூறினால் அது பயிற்சியாளர்களுக்கு நெருக்கடியாக அமைந்து விடும்.’ என்று கூறியுள்ளார். தோனியின் தலைமையின் கீழ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரை 4 முறை வென்றுள்ளது. நடப்பு சீசனில் 4 போட்டிகளில் இதுவரை விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்று 6 ஆவது இடத்தில் உள்ளது. இன்னும் சென்னை அணிக்கு 10 போட்டிகள் மீதம் உள்ள நிலையில், எப்படியும் அடுத்த சுற்றான ப்ளே ஆஃப் சுற்றுக்கு அணி முன்னேறி விடும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.