ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு போட்டிக்கான ஊதியத்திலிருந்து 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன் அன்று சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் சென்னை அணி 3 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 175 ரன்கள் எடுக்க, அடுத்து விளையாடிய சென்னை அணியால் 172 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த போட்டியின் முடிவில் கருத்து தெரிவித்ததற்காக அபராதம் விதிப்புக்கு ராஜஸ்தான் அணியின் ஆல் ரவுண்டர் அஷ்வின் ஆளாகியுள்ளார்.
சென்னை அணியுடனான வெற்றிக்கு பின்னர் அஷ்வின் அளித்த பேட்டியில், ‘பனிப்பொழிவு இருந்ததால் நடுவர்கள் பந்தை மாற்றினார்கள். முன்பு இதுபோன்று நடந்ததில்லை என்பதால் நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். நாங்கள் பந்துவீசும் அணியாக இருக்கும்போது நாங்களே பந்தை மாற்றித் தருமாறு கேட்கவில்லை. ஆனால் நடுவர்கள் அதை செய்தனர். நான் இதுபற்றி நடுவரிடம் கேட்டபோது, எங்களால் பந்தை மாற்ற முடியும் என்று சொன்னார்கள். எனவே பனிப்பொழிவு இருக்கும்போதெல்லாம் பந்து மாற்றப்படும் என்று நம்புகிறேன்.’ என்று கூறியிருந்தார்.
மேலோட்டமாக பார்க்கும்போது அஷ்வின் தெரிவித்தது சாதாரணமாக இருந்தாலும், அவர் ஐபிஎல் விதிகளை மீறியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஐபிஎல் நடத்தை விதிப்படி மேட்ச் நடக்கும்போது வீரர்கள், அலுவலர்கள் உடன் நடந்த விஷயங்களை பொதுவெளியில் கூறி விமர்சிக்க கூடாது. இதனை மீறியதால் அஷ்வினுக்கு ஐபிஎல் நடத்தை விதி 2.7-இன்படி போட்டிக்கான கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மிக மெதுவாக அணி பந்து வீசியதால் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.