இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய ஆட்டக்காரர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இந்திய அணியின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் கோப்பையை 2-1 என்ற கணக்கில் வென்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஜூன் மாதம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்தியா எதிர்கொள்கிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஷ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஆஸ்திரேலியா உடனான ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட சூர்ய குமார் யாதவ் 3 ஒரு நாள் போட்டிகளில் ஒரு ரன் கூட எடுக்காமல் ஏமாற்றம் அளித்தார். முதுகில் ஏற்பட்டுள்ள காயத்திற்காக ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது சிகிச்சை எடுத்து வருகிறார். அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவர் 3 மாதங்களுக்கு ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால் ஜூன் 7 ஆம்தேதி இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே காயம் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா, ரிஷப் பந்த் உள்ளிட்ட முக்கிய ஆட்டக்காரர்கள் ஓய்வில் இருப்பதால் ஷ்ரேயாஸ் ஐயரின் விலகல் இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று கிரிக்கெ விமர்சகர்கள் கூறியுள்ளனர். இதற்கிடையே, ஷ்ரேயாஸ் ஐயர் விலகியுள்ளதால் அவர் வகித்து வந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பு நிதிஷ் ராணாவுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket