ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடியது. முதல் இரு போட்டிகளும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணி தலா ஒரு வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என சமனில் இருந்தது. எனவே, கோப்பையை நிர்ணயிக்கும் 3ஆவது மற்றும் கடைசி போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
நீண்ட நாள்களுக்குப் பின்னர் சென்னையில் போட்டி நடைபெற்றதால் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடத்துன் குவிந்தனர். டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் சிறப்பான தொடக்கத்தை தந்த நிலையில் பின்னர் வந்த மற்ற வீரர்கள் சுமாரான ரன்களை சேர்த்தனர். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடினர். இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா 30 ரன்களும், சுப்மன் கில் 37 ரன்களும் எடுத்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். தொடர்ந்து விளையாடிய விராட் கோலி 54 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
வெற்றியை நோக்கி எளிதாக நெருங்கிக்கொண்டிருந்த இந்திய அணி வீரர்கள் ஒரு கட்டத்தில் அடுத்தடுத்து ஆட்டமிழக்கத் தொடங்கினர். இதன் காரணமாக இந்திய அணியால் 49.1 ஓவர்களில் 248 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி தொடரை வென்று கோப்பையை கைப்பற்றியது.
இந்த அதிர்ச்சி தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கருத்து கூறுகையில், "வெற்றி இலக்கான 269 ரன்கள் என்பது மிக கடினமான ஒன்று கிடையாது. இரண்டாவது பாதியில் பிட்ச் சிறிது சவாலாக தான் இருப்பினும். இருப்பினும் எங்கள் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடவில்லை. வெற்றி இலக்கை அடைய பாட்னர்ஷிப் முக்கியம். அதில் நாங்கள் தோல்வி அடைந்துவிட்டோம்.
இதையும் படிங்க: IndvsAus : சேப்பாக்கத்தில் சொதப்பிய இந்தியா..! - ஆறுதல் கொடுத்த சாதனைகள்
இதுபோன்ற ஸ்லோ பிட்சுகளில் தொடர்ந்து விளையாடி பழகியவர்கள் தான் நம் வீரர்கள். அப்படி இருந்தும் அவர்கள் ஆட்டமிழந்த விதம் வருத்தம் அளிக்கிறது. நாம் முன்னேற வேண்டிய தேவை உள்ளது என்பதை உணர வேண்டும். இது ஒட்டு மொத்த அணியின் தோல்வியாகும்.
இந்த தொடரில் இருந்து நிறைய பாடங்களை நாம் கற்க வேண்டும். ஆஸ்திரேலிய அணிக்கு பாராட்டுக்கள். அந்த அணியின் ஸ்பின்னர்களும் சரி வேகப்பந்து வீச்சாளர்களும் சரி தங்கள் பணியை மிக சிறப்பாக செய்துள்ளனர்" என்று கூறினார். இந்தியாவில் நடைபெறும் இரு தரப்பு ஒரு நாள் போட்டி தொடரில் இந்திய அணி 4 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது தான் தொடரை இழந்துள்ளது. இதற்கு முன்பு விராட் கோலி கேப்டனாக இருந்த 2019இல் அரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை வீழ்த்தி தொடரை வெற்றது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: India captain Rohit Sharma, India vs Australia, Rohit Sharma