காவிரிக் கதவணைப் பகுதியில் மீனவர் ஒருவர் மீன்பிடிக்க வீசிய தோட்டா வெடியில் சிக்கி இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி அருகே சேலம் மாவட்டம் பூலாம்பட்டி மற்றும் ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டையினை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டு, அங்கு நீர் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. உள்ளூர் மீனவர்கள் இங்கு மீன்பிடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அதில் ஒரு சில மீனவர்கள் பாறைகளைத் தகர்க்கப் பயன்படுத்தும் டெட்டநேட்டர் எனப்படும் (தோட்டா) வெடியினை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி மீன்களைப் பிடித்து வருகின்றனர். அணையின் பாதுகாப்பினை கருதியும், சட்ட விரோதமான முறையில் வெடிபொருள்களைக் கையாளுவதைத் தடுக்கும் நோக்கிலும் ஏற்கனவே இவ்வகையில் தோட்டா வெடி வீசி மீன் பிடிக்க போலீசார் தடைசெய்துள்ளனர்.
இந்த நிலையில், பூலாம்பட்டி அடுத்த ஊத்துக்குளி காடு பகுதியைச் சேர்ந்த பெருமாள் (எ) முருகன் (40), என்ற மீனவர் தோட்டா வெடி பயன்படுத்தி மீன்பிடித்துக் கொண்டு இருந்தார். அப்போது, ஆற்று நீரில் குளித்துக் கொண்டு இருந்த இளைஞர் மேல், மீனவர் வீசிய வெடி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
அவருடன் இருந்த நண்பரின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் ஓடி வந்து தண்ணீரில் ரத்த வெள்ளத்தில் மிதந்து மோகன் குமாரைச் சடலமாக மீட்டனர். இது குறித்து தகவல் அறிந்த வந்த பூலாம்பட்டி போலீசார், இளைஞனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Also Read : சேலம் மாவட்டத்தை 3 ஆக பிரிக்க வேண்டும்... சட்டமன்றத்தில் பாமக எம்.எல்.ஏ கோரிக்கை...!
இதனையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், இறந்த இளைஞர் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஆவரங்காடு, ஒட்டமெத்தை பகுதியைச் சேர்ந்த மோகன்குமார் (22), என்பது தெரியவந்தது. மேலும், மோகன்குமார் மற்றும் அவரின் நண்பர் பூபதி இருவரும், சொந்தக்காரர் வீட்டிற்கு விருந்தாளி வந்திருந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. சட்டவிரோதமாகத் தோட்டா வெடி வீசி மீன்பிடித்த மீனவர் பெருமாள் தலைமறைவான நிலையில், காவல்துறையினர் அவரை கைதுசெய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cauvery River, Salem