ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உணவக உரிமையாளரின் விரலை கடித்து துப்பியவரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சி அலுவலகம் முன்பு உணவகம் நடத்தி வருபவர் கதிரேசன் (50). இவர் கூட்ட நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு சாப்பாடு பரிமாறிக் கொண்டிருந்தார். இவரது கடையில் வேலையாட்கள் யாரும் வைத்துக் கொள்ளாமல், இவர் ஒருவரே வேலை செய்து வருவதால், மிகவும் பரபரப்பாக பணி செய்வது இவரது வழக்கம்.
இந்த நிலையில் முஷ்டகுறிச்சியை சேர்ந்த வழிவிட்டான்(45) என்பவர் பார்சல் சாப்பாடு வாங்க இவரது உணவகத்திற்கு சென்றுள்ளார். பார்சல் சாப்பாடு கட்ட தாமதமாகும் என கதிரேசன் கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வழிவிட்டான், அருகில் கிடந்த சமையல் கரண்டியால் கதிரேசனை தலையில் பலமாக தாக்கியுள்ளார்.
மேலும், கதிரேசனின் இடது கையின் ஆள்காட்டி விரலை கடித்து உணவகம் முன்பு உள்ள கழிவுநீர் கால்வாயில் துப்பி விட்டு தப்பியோடியுள்ளார். இதனை கண்ட அக்கம்பக்கதினர் துண்டான ஆள்காட்டி விரலின் பகுதியை தேடி பார்த்துள்ளனர். ஆனால் விரல் கிடைக்காததால் கதிரேசனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வழிவிட்டானை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர்: மு.சர்க்கரை முனியசாமி, கமுதி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Local News, Ramanathapuram