புதுக்கோட்டை விராலூர் கிராமத்தை சேர்ந்த திருநங்கை வர்ஷா நாட்டுப்புற கலைகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இவரது சேவைகளை மாவட்ட நிர்வாகம் பாராட்டி இவருக்கு கலைவளர்மணி விருதை வழங்கியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலூர் கிராமத்தை சேர்ந்தவர் திருநங்கை வர்ஷா. இவர் எம்.ஏ நாட்டுப்புறவியல் முடித்து விட்டு தற்போது நாட்டுப்புற கலைகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
அழகான சிரித்த முகத்துடன் நம்மை வரவேற்ற அவர் நம்மிடம் நான் அழகாக இருக்கிறேனா? என கேட்க. கொஞ்சம் பொறாமையோடு உங்களுக்கு என்ன அக்கா ரொம்ப அழகா இருக்கீங்க என கூறி நாட்டுப்புற கலைகள் மீது ஆர்வம் எப்படி வந்தது என கேட்டு பேட்டியை துவங்கினோம்.நாட்டுப்புற கலைகள் பற்றி வர்ஷா பேசியபோது, “சிறு வயதிலேயே எனக்குள் ஒரு பெண்மை இருப்பதை நான் உணர்ந்தேன். பள்ளிக்குச் செல்லும்போது பொட்டு வைத்துக் கொள்வது, பெண் தோழிகளுடன் மகிழ்ச்சியாக பேசுவது விளையாடுவது போன்றவை எனக்கு மிகவும் பிடிக்கும்.
பின்னர் பள்ளி படிக்கும் போது மற்ற மாணவர்கள் என்னை ஒன்பது போன்ற வார்த்தைகளால் விமர்சனம் செய்தார்கள். ஆனால் அதற்கு அர்த்தம் என்ன என்பது கூட தெரியாத எனக்கு பனிரெண்டாம் வகுப்பு முடித்த பின் வீட்டில் இருந்து வெளியே வந்தேன். எங்கள் திருநங்கைகள் சமுதாய மக்களை அடைந்து பின் பெண்ணாக மாற அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். முதலில் வீட்டில் எதிர்ப்பு இருந்தது பின்னர் எங்கள் வீட்டில் என்னை ஏற்றுக் கொண்டனர்.எங்கள் வீட்டில் ஏற்றுக் கொண்ட போதிலும் நான் வெளியே செல்லும் போதும் கல்லூரி செல்லும் போதும் கூட என்னை பலர் வார்த்தைகளால் விமர்சனம் செய்தார்கள்.
இவர்கள் அனைவருக்கும் மத்தியில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் சிரத்தையுடன் நாட்டுப்புற கலைகள் கற்றேன். நாட்டுப்புற நடனத்தை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் உன்னத பணியை செய்து வருகிறேன். இன்னும் இந்த துறையில் பல்வேறு சாதனைகளை படைக்க வேண்டும் என்ற நோக்கில் பல முயற்சிகளை செய்து வருகிறேன். என்னை போன்ற மற்ற திருநங்கைகளுக்கும் பல்வேறு திறமைகள் உள்ளது அதற்கான வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் மட்டுமே அவர்களின் தடம் மாறிவிடுகிறது. எனவே அனைவரும் திருநங்கைகளுக்கும் வாய்ப்பு கொடுத்தால் அவர்களின் திறமையும் வெளிப்படும்” என்று கண்களில் நம்பிக்கை மின்ன தெரிவித்தார் வர்ஷா.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
நாட்டுப்புற கலைகளை வளர்தெடுப்பதற்காக இவருக்கு பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளன. தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை சார்பில் புதுக்கோட்டை மாவட்ட அளவில் சிறந்த கிராமிய நடன கலைஞராக தேர்வு செய்யப்பட்டு ”கலைவளர்மணி” விருது பெற்றுள்ளார்.சமூகம் தன் மீது வெறுப்பை உமிழ்ந்த போதும் சமூக வளர்ச்சிக்கு பாடுபடும் வர்ஷா போன்ற திருநங்கைகளை மற்றவர்கள் எடுத்துக்காட்டாக எடுத்துக் கொண்டு தடம் மாறாமல் லட்சியப் பாதையில் பயணம் செய்ய வேண்டும் என்பதே வர்ஷாவின் வாழ்க்கையில் இருந்து மற்றவர்கள் கற்க வேண்டிய பாடம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Pudukkottai