புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 மகள்களை தைரியத்துடன் வளர்க்கும் வீரத்தாய் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
அன்னை தான் இவ்வுலகில் நமக்கு கிடைத்த விலை மதிப்புள்ள உறவாகும். அன்னையர்கள் பல வித சவால்களை சந்தித்து அவை எல்லாம் எதிர்த்துப் போராடி சாதனை படைத்து வருகின்றனர். இத்தகைய பெருமைக்கு உரிய அன்னையர்களுக்காக கொண்டாடப்படும் தினமே அன்னையர் தினமாகும்.
அந்த வகையில் இன்று (மே 14ம் தேதி) அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படும் நிலையில் பல்வேறு சோதனைகளை கடந்துச் சாதனைகளைப் படைத்து வரும் ஒரு அன்னை பற்றிய சிறப்பு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
புதுக்கோட்டை மாவட்டம் கொண்டமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் மாரியாயி. இவருக்கு 4 பெண் பிள்ளைகள். கணவர் 4 வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். அவர் இருந்தபோதிலும் உடல்நிலை சரியில்லாத நிலையிலேயே இருந்துள்ளார். அன்றிலிருந்து தனது 4 பெண் பிள்ளைகளை வளர்த்துப் படிக்க வைத்து தற்போது 2 பெண்களை திருமணம் செய்து கொடுத்தும் இளைய மகளை எம்.ஏ பட்டப்படிப்பும் படிக்க வைத்தும் தனது கடைசி மகளை டி.என்.எம் படிக்க வைத்தும் வருகிறார்.
வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்த மாரியாயி நம்மிடம் பேசுகையில், “எனக்கு பூமதி, தமிழ்செல்வி, காவேரி, தரணி என்று 4 பெண் பிள்ளைகள். அவர்களை அன்றிலிருந்து மிகவும் கஷ்டப்பட்டு பல்வேறு சோதனைகளை கடந்து தான் வளர்த்து வருகிறேன். தற்போது முதல் 2 பிள்ளைகளை திருமணம் செய்து கொடுத்து விட்டேன்.
கடைசி மகள் தரணி நர்சிங் படித்து வருகிறார். இளைய மகள் காவேரியை எம்,ஏ வரையும் படிக்க வைத்துள்ளேன். தற்போது கச்சேரிகளில் பாடி வருகிறார். பெண் பிள்ளைகள் என்பதால் எங்களை யாரும் மதித்து பேசுவது கூட கிடையாது. எங்களுக்கு உதவி செய்யக் கூட அவசரத்திற்க்கு கூட யாரும் வரமாட்டார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் எனது மகள்களை கூலி வேலைக்கு சென்றும், கால்நடைகளை மேய்த்தும் வளர்த்து வருகிறேன்.
இளைய மகள் காவேரி கச்சேரிகளுக்கு செல்லும்போது இரவு வேலைகளில் நானும் கூடவே சென்று விடுவேன். வீட்டில் இருக்கும் கடைசி மகள் தனியாகத்தான் இருப்பாள். கடவுள்தான் அவளுக்கு துணையாக இருக்கவேண்டும் என்று நினைத்து விட்டு செல்வேன்” என்று கண்ணீர் மல்க மாரியாயி தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும் மாரியாயி மகள் காவேரி பேசுகையில். “எனது அம்மாவை பார்த்து எனக்கு பொறாமையாக கூட இருக்கும் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு தனி ஒரு பெண்ணாக இந்த உலகத்தில் நின்று இன்று வரையிலும் ஒரு மன தைரியம் உள்ள பெண்ணாக அம்மா இருக்கிறார். அம்மாவை பார்த்து தைரியமாக இருக்க கற்றுக் கொண்டேன். நிச்சயமாக நல்ல நிலைக்கு கொண்டு வருவேன்” என்று கூறி காவேரியும், தரணியும் முத்தமிட்டு தனது அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Mothers day, Pudukkottai