புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த மங்கனூர் புனித செபஸ்தியார் ஆலய திருத்தேர் விழா விடிய விடிய விமரிசையாக நடைபெற்றது. இதில் ஒற்றுமையுடன் அனைத்து சமூகத்தினரும் இணைந்து உலக நன்மைக்காக கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள மங்கனூர் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பொது முடக்கம் காரணமாக இந்த ஆலயத்தில் திருவிழா நடைபெறவில்லை.
தற்போது அரசு கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளதால் கடந்த திங்கட்கிழமை இந்த ஆலயத்தின் திருவிழா திருச்சிலுவை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனை தொடர்ந்து புனித செபஸ்தியாரின் திருவுருவம் தாங்கிய கொடி ஊர்வலம் வந்த பின்பு மீண்டும் கொடியேற்றம் நடைபெற்றது. அதன்பின் நள்ளிரவு 12 மணியளவில் ஏழு திருத்தேர் அந்த ஆலயத்தை சுற்றி உள்ள முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தது.
முக்கிய வீதியான பழைய செபஸ்தியார் கோவில் தெரு, அந்தோணியார் கோவில் தெரு, வழியாக விடிய விடிய தேர் பவனி விழா விமரிசையாக நடைபெற்றது. இந்த தேர் பவனி விழாவில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சமூக பாகுபாடுகளைக் கடந்து தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்று புனித செபஸ்தியாரை வழிபட்டனர்.
மேலும் இத்தலத்தில் உலக நன்மைக்காகவும், நல்ல மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், கூட்டு வழிபாடு பிரார்த்தனைகள் நடைபெற்றது. இத்திருவிழாவை முன்னிட்டு அசம்பாவிதங்களை தடுக்கும் நோக்கில் 100கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Car Festival, Local News, Pudukkottai