புதுக்கோட்டையில் இருந்து 19 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருமயம் மலைக்கோட்டை. இந்த மலைக்கோட்டையில் தான் உள்ளது பீரங்கி மலை, எட்டு படித்துறைகள் உள்ள எண்கோண குளம், அகழிகளாக இருந்த இடத்தின் மிச்சங்கள் மற்றும் அழகிய கோட்டை ஆகியவை இருக்கிறது.
தமிழகத்தை ஆண்ட மன்னர்களின் சரித்திரத்தை இன்னும் பல தலைமுறைகளுக்கு கற்றுத்தர நீடித்து நிற்கிறது இந்த திருமயம் கோட்டை. இதை சுற்றிப்பார்க்கலாம் வாங்க.
திருமயம் கோட்டை. திருமயம் கோட்டை ராமநாதபுரம் மன்னர் சேதுபதியின் காலத்தில் 1676-ம் ஆண்டு கட்டப்பட்டது.
வட்டவடிவமாக கட்டப்பட்ட கோட்டையும், அதைச் சுற்றிலும் ஏழு சுற்று மதில் சுவர்கள் இருந்துள்ளன. கோட்டையைச் சுற்றிலும் அகழிகள் இருந்ததற்கான தடயங்கள் இப்போதும் தென்படுகின்றன. இந்த கோட்டையின் உச்சியில் பீரங்கி மேடையில் பீரங்கி ஒன்று கம்பீரமாக காட்சியளிக்கிறது.
40 ஏக்கர் பரப்பளவில் கோட்டை பரந்து விரிந்து காணப்படுகிறது. கோட்டையின் உச்சியில் இருந்து பார்த்தால் மொத்த ஊரும் தெரியும் வகையில் அமைந்துள்ளது.
ஏழு மதில் சுவர்கள் இருந்த இடத்தில் இப்போது மூன்று மதில் சுவர்கள் தான் உள்ளது. வெளிச்சுவர் சுற்றி ஆழமான அகழிகள் இருந்ததற்கான அடையாளங்கள் தென்படுகின்றன. கோட்டைக்கு வடக்கு, தெற்கு, தென் கிழக்கு ஆகிய மூன்று திசைகளிலும் நுழைவு வாயில்கள் உள்ளன.
வடக்கு வாயிலில் பைரவர், தென்கிழக்கு வாயிலில் கருப்பர், தெற்கு வாயிலில் அனுமன், சக்தி, கணபதி ஆகிய தெய்வங்களுக்கான கோயில்கள் உள்ளன.
எதிரி நாட்டு படையிடமிருந்து மன்னரையும் அவரது குடும்பத்தையும் காப்பதற்காகவே ஏழு மதில் சுவர்கள் எழுப்பப்பட்டது என்று கூறுகின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.
திருமயம் கோட்டையின் உச்சியிலிருந்து பார்த்தால் பல மைல்களுக்கு அப்பால் வரும் எதிரி நாட்டுப் படைகள் கூட எளிதில் அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் அமைந்திருக்கிறது. ஊமையன் கோட்டை என்ற பெயருடனும் இந்த கோட்டை அழைக்கப்படுகிறது.
பீரங்கி மலை கோட்டையின் உச்சியில் இருக்கும் மேடையில் ஒரு பீரங்கி உள்ளது. அது தற்போது வரை துரு பிடிக்காமல் கம்பீரமாக நிற்கிறது. இந்த பீரங்கி பல போர்களில் பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது.
ஆங்கிலேயர்கள் காலத்தில் இருந்து பல போர்கள் மற்றும் வெற்றிகளுக்கு ஒரே சாட்சியாக அமைதியாகவும் கம்பீரமாகவும் நிற்கிறது இந்த பீரங்கி. இந்த பீரங்கி 20 அடி உயரமுள்ள மேடையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : சுற்றுலா பயணிகள் என்ஜாய் பண்ண ஏற்ற இடம் - கன்னியாகுமரி குற்றியார் இரட்டை அருவி!
இங்கு இருந்து பீரங்கிக் குண்டுகள், சங்கிலிப் போர் உடைகள், உடை வாள்கள், பூட்டுகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டு அவை அனைத்தும் புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பீரங்கி மட்டும் இந்த மலையில் வைக்கப்பட்டு தொல்லியல் துறையின் மூலம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. எண்கோண குளம்..கோட்டை அருகில் உள்ள சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலில் உள்ளது தான் இந்த எண் கோண குளம். தாமரை மலர் போன்ற தோற்றத்தில் உள்ளது.
இந்த எண் கோண குளத்திற்கு எட்டு படி துறைகளுடன் இருப்பதால் இது என் கோண குலம் என்று அழைக்கப்படுகிறது.இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் முதலான அஷ்டதிக்கு பாலகர்கள் வீற்றிருந்து அருள் பாலித்து வருவதாக ஊர் மக்கள் தெரிவித்தனர்.
இந்த தீர்த்த குளத்தில் உள்ள தண்ணீரை தொட்டாலோ அல்லது சத்திய தீர்த்தம் என வாயால் சொன்னாலோ போதும் பாவங்கள் விலகிவிடும் என்பது இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
இந்த குளத்தில் தண்ணீர் எப்போதும் வற்றாத நிலையில் காணப்படும் என்று ஊர் மக்கள் தெரிவித்தனர். அகழிகள்
கோட்டையை சுற்றி ஆழமான அதே சமயம் ஒரு காலத்தில் ஆபத்து நிறைந்ததாக இருந்த கோட்டையின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டிருந்தது.
தற்போது அதற்கான மிச்சங்கள் மட்டுமே அகழி இருந்ததற்கான தடயங்களாக காணப்படுகின்றன. இதன் அருகில் ஒரு குகைக் கோயில் ஒன்றும் அதில் சதுர வடிவில் லிங்கமும் அமைந்துள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
சுற்றுலா பயணிகள் கோட்டையின் அழகை சுற்றிப்பார்க்கலாம் ஆனால் வரலாற்று சின்னங்களை சிதிலப்படுத்தும் நோக்கத்தோடு செயல்படாமல் இருக்க வேண்டும் என்று ஊர் பொதுமக்கள் இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கேட்டுக்கொண்டனர்.
செய்தியாளர் : சினேகா - புதுக்கோட்டை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Pudukkottai