தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மூலமாக முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டமானது பெண் சிசுக்கொலையை தடுக்கவும் பெண் கல்வியை ஊக்குவிக்கவும் தமிழக முதலமைச்சரால் தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டம் குறித்து புதுக்கோட்டை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் கூடுதல் பொறுப்பில் உள்ள திருமதி ஷியாமளா பேசினார். அப்போது இந்த திட்டத்தில் பயனாளியாக இருக்க குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை, இரண்டு பெண் குழந்தை மட்டுமே இருக்க வேண்டும். அதாவது ஆண் வாரிசு இல்லாமல் மற்றும் முதலில் ஒரு பெண் குழந்தை இரண்டாவது பிரசவத்தில் இரட்டைப் பெண் குழந்தைகள் இருப்பவர்கள் இந்த திட்டத்தில் பயனாளிகள் ஆவார்.
ஒரு பெண் குழந்தையுடன் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் தம்பதியினரின் குழந்தை பெயரில் ரூபாய் 50,000 டெபாசிட் செய்யப்பட்டு சேமிப்பு பத்திரமாக வழங்கப்படும்.
இரண்டு பெண் குழந்தையுடன் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் தம்பதியினரின் குழந்தைகளின் பெயரில் தலா ரூபாய் 25 ஆயிரம் வீதம் டெபாசிட் செய்யப்பட்டு இரண்டு குழந்தைகளுக்கும் 50,000 ரூபாய் -கான சேமிப்பு பத்திரம் வழங்கப்படும்.
முதல் பிரசவத்தில் ஒரு குழந்தையும் இரண்டாவது பிரசவத்தில் இரட்டைப் பெண் குழந்தைகளும் ஆக மொத்தம் மூன்று பெண் குழந்தைகளுடன் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் தம்பதியினரின் குழந்தைகளின் பெயரில் ஒரு பெண் குழந்தைக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் 75 ஆயிரம் ரூபாய் -கான சேமிப்பு பத்திரம் வழங்கப்படும்.
இச் சேமிப்பு பத்திரங்கள் ஐந்தாண்டுக்கு ஒரு முறை புதுப்பித்து வழங்கப்படும். முதல் ஐந்தாண்டு புதுப்பிக்கப்பட்டவுடன் பெண் குழந்தையின் கல்வி செலவிற்காக ஆண்டுதோறும் ஊக்க தொகையும் வழங்கப்படும். குழந்தைக்கு 18 வயது முடிவுற்றதும் முதிர்வு தொகை மொத்தமாக வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் சேரும் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூபாய் 72000-க்குள் வேண்டும். பெற்றோரின் வயது சான்று இணைக்கப்பட வேண்டும் . கணவன் அல்லது மனைவியின் குடும்ப நல அறுவை சிகிச்சை சான்று இருக்க வேண்டும். மேலும் அறுவை சிகிச்சை செய்யும் போது 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும், இருப்பிடச் சான்று, ஆண் வாரிசு இல்லை என்பதற்கான சான்று, குழந்தை பிறப்புச் சான்று, இரண்டாவது பெண் குழந்தை பிறந்து மூன்று வயதுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். குழந்தைகள் முதிர்வு தொகை பெறுவதற்கு பத்தாம் வகுப்பு கட்டாயம் படித்திருக்க வேண்டும். இந்த ஆவணங்களுடன் இ- சேவை மையங்கள் வழியாக மின் ஆளுமை திட்டத்தின் கீழ் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Govt Scheme, Local News, Pudukkottai, Selvamagal Scheme