புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தபேதராக பணியாற்றியவர் அன்பழகன். இவர் சமீபத்தில் பணி ஓய்வு பெற்ற நிலையில் இவருடைய கடைசி பணி நாளின் இறுதியில் அன்பழகனை மாவட்ட ஆட்சித் தலைவர், அவரது காரில் அமர வைத்து வீட்டிற்கு அனுப்பி வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
கடந்த மாத இறுதியில் பணி ஓய்வு பெற்ற அன்பழகனுக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவின் இல்லத்தில் பிரிவு உபசரிப்பு நிகழ்வுகள் மிக விமர்சையாக நடந்துள்ளது. அதன்பின்னர் அன்பழகனை தனது காரின் முன் சீட்டில் அமர வைத்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு நெகிழ்வோடு அவரின் வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அதற்கு முன் அன்பழகனுக்காக காரின் கதவை கூட ஆட்சியரே திறந்து விட்டிருக்கிறார். இந்நிலையில், கடைநிலை ஊழியர் ஒருவருக்கு மாவட்ட ஆட்சியர் அளித்த கவுரவம் புதுக்கோட்டை மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியியுள்ளது.
இதுகுறித்து அன்பழகன் கூறுகையில், “நான் இந்த பணியில் சேர்ந்த நாள் முதல் இன்று வரை பல்வேறு அனுபவங்களை பெற்றுள்ளேன். அதாவது ஒவ்வொரு மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் பணியாற்றிய போதும் அவர்கள் அனைவரும் எனக்கு எவ்வாறு பணியாற்றிட வேண்டும் என்பது குறித்து கற்றுக் கொடுத்தனர். என்னுடன் பணியாற்றிய அனைத்து அலுவலர்களும் எனக்கு உறுதுணையாக இருந்தனர்.
அதில் நான் கடைசியாக பணியாற்றிய மாவட்ட ஆட்சித் தலைவர் தான் ஆட்சியர் கவிதா ராமு . நான் வேலையில் சேர்ந்த நாள் முதல் இன்று வரை மிகவும் அன்புடனும் . எளிமையுடனும் பழகுவார். என்னுடைய முழு பெயர் அன்பழகன் ஆனால் ஆட்சியர் கவிதா ராமு எப்போதும் அன்பு என்றுதான் அழைப்பார். நான் பல்வேறு ஆட்சியர்களுடன் பணியாற்றியுள்ளேன். ஆனால், ஆட்சியர் கவிதா ராமு உடன் பணியாற்றியது எனக்கு மிகுந்த சந்தோஷமாகவே இருந்தது.
அனைவரின் மீது அக்கறை கொண்ட ஒரு ஆட்சியராக நான் நமது ஆட்சியர் கவிதா ராமுவை பார்த்து உள்ளேன். மனு அளிக்க வரும் அவர்களை கூட அழைத்து மனுக்களை பெற்றுக்கொண்டு அதற்கான தீர்வுகளை எடுப்பது குறித்து பேசிய பின் அவர்களுக்கு ஆறுதல் வார்த்தை கூறுபவர் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு. மேலும் நான் பணி ஓய்வு பெற்ற நாளில் அவர் தனது காரில் என்னை அவரது இருக்கையில் அமர வைத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தது என் வாழ்க்கையில் மிகவும் நெகிழ்ச்சி அடைய செய்த தருணமாக இன்று வரை இருக்கிறது.
ஆட்சியரிடம் நான் எப்போதும் கூறிக் கொண்டே இருப்பேன் நீங்கள் இருக்கும் போதே நான் பணி ஓய்வு பெற்று விட வேண்டும் என்று அந்த ஆசை தற்போது நிறைவேறிவிட்டது என்று நான் பணி ஓய்வு பெறும் நாளில் ஆட்சியரிடம் தெரிவித்தேன். மேலும், இந்த பணி நாட்களில் எனது குடும்பத்தாரும் எனக்கு முழு ஒத்துழைப்பை அளிப்பர் பணி நேரத்தில் தொல்லை செய்வது போன்றவை இல்லாமல் ஒத்துழைப்பு கொடுத்ததனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
என் பணி நாள் அனுபவத்தில் மிகவும் மறக்க முடியாத மற்றும் மகிழ்ச்சியடைந்த தருணம் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவராக தற்போது பணியாற்றி வரும் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தனது காரில் தனது இருக்கையில் என்னை உட்கார வைத்து அழைத்து சென்ற தருணம் என்று மட்டுமே” முழு மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் அன்பழகன்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Pudukkottai