கர்ப்பிணி பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதைப் போக்க சத்துமாவு வழங்கப்பட்டு வருகிறது. அதில், செய்யப்பட்டுள்ள மாற்றம் குறித்து புதுக்கோட்டை அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதைப் போக்க மாநில அரசு, சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை மூலம் அங்கன்வாடி மையங்கள் வாயிலாக இணை உணவாக சத்துமாவு பாக்கெட்டுகளை மாதந்தோறும் வழங்கி வருகிறது. இதேபோல, 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணி பெண்களின் ஊட்டச்சத்து நிலையை முன்னேற்ற இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அங்கன்வாடி மையங்கள் மூலம் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்பட்டு வரும் சத்துமாவு பாக்கெட்டுகளில் தமிழ்நாடு அரசு மாற்றம் செய்துள்ளது. அதன்படி, இந்திய தர நிர்ணயக் கழகத்தின் முத்திரையுடன் கூடுதல் சுவை, புரதச்சத்து விகிதத்தை அதிகரித்து வெள்ளை, நீலம், இளஞ்சிவப்பு ஆகிய 3 வண்ணங்களில் மாவு பாக்கெட்டுகள் வகை பிரித்து வழங்கப்பட்டு வருகிறது.
இதில், வெள்ளை நிற பாக்கெட்டுகள் 6 மாதம் முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும், இளஞ்சிவப்பு நிற பாக்கெட் 2 வயது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு நீல நிற பாக்கெட்டுகளும் வழங்கப்பட்டுகிறது.
இந்த திட்டம் குறித்து புதுக்கோட்டை மாவட்டம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் விராலிமலை வட்டார அலுவலர் திருமதி மேரி ஜெயபிரபா விளக்கி கூறுகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் ஊட்டச்சத்தை உறுதி செய் என்ற திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதை தவிர்க்க இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
முன்பு அனைவருக்கும் ஒரே வகையான இந்த சத்துமாவு வழங்கப்பட்டது. தற்போது மேலும் செறிவூட்டப்பட்ட மாவாக வழங்கப்பட்டு வருகிறது. முன்பு கொடுக்கப்பட்ட மாவை விட தற்போது கொடுத்து வருமாறு அதிக அளவில் புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
கேழ்வரகு மாவு, பொட்டுக்கடலை மாவு, உளுந்து மாவு, தாதுக்கள், விட்டமின்கள், வெல்லம், நிலக்கடலை மாவு, முளைகட்டிய கேழ்வரகு மாவு, ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் கர்ப்பிணிகளுக்கும் ரத்த சோகை வராமல் தடுப்பதற்கு இந்த மாவு வழங்கப்பட்டு வருகிறது. மாதத்தின் தொடக்கத்திலேயே இந்த மாவு பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் அதை கொட்டி வைப்பதற்கும், வீணாகாமல் பாதுகாத்துக் கொள்ளவும் ஒரு கண்டெய்னரும் வழங்கப்படுகிறது என்றார்.
இந்த சத்துமாவினை எடுத்துக் கொள்ளும் கர்ப்பிணி பெண்ணான உலகேஸ்வரி இது குறித்து கூறுகையில், தொடர்ந்து இந்த சத்துமாவை சாப்பிட்டு வருவதால் குழந்தையின் எடை கூடியிருப்பதை கவனித்து வருகிறோம். மேலும், இதனை எங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு சமைத்து அதாவது கேரட் துருவல், கீரை இவற்றையும் சேர்த்து அடையாகவும், தோசையாகவும், புட்டாகவும் செய்து சாப்பிட்டு வருகிறோம் இது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க | நெகிழ்ச்சி அடைய செய்த பசுவின் தாய் பாசம்..! வியந்து பார்த்த புதுக்கோட்டை மக்கள்..!
இது குறித்து பாலூட்டும் தாய்மாரான குளோரிநான்சி அவர்கள், இந்த மாவினை தொடர்ந்து சாப்பிடுவதால் எங்களுக்கு தாய்ப்பால் அதிகமாக சுரக்கிறது. மேலும், குழந்தையின் எடையும் ஊட்டச்சத்தும் அதிகரித்துள்ளது. அனைவருக்கும் ஊட்டச்சத்து குறைபாடு தற்போது ஏற்பட்டு வருகிறது ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை அனைத்து மக்களாலும் சாப்பிட முடியாது தமிழக அரசின் இந்த திட்டமானது ஏழை கர்ப்பிணி பெண்களுக்கும், தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது என்று தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anganvadi, Local News, Pudukkottai