கடந்த காலங்களில் பிறக்கும் குழந்தைகளில் பாதி பேர் பசும்பாலை நம்பியே வளர்ந்தனர். தாய்ப்பாலுக்கு மாற்றாக கருதப்படும் பசும்பாலை குடித்து பல குழந்தைகள் இன்று வரை உயிர் வாழ்ந்திருக்கின்றனர் என்றால் அது மிகையல்ல. இப்படி மனித வாழ்வில் ஒரு அங்கமாக மாறி உள்ள பசும்பால் இன்று சுத்தமாக கிடைக்கிறதா? என்றால் இல்லை என்று சொல்லும் அளவிற்கு உள்ளது. கடந்த காலங்களில் கிராமப்புறங்களில் மாடுகளை வளர்ப்பதற்காக சிறு கொட்டகை மற்றும் பட்டி கட்டி அதில் புல்லு, தழைகள் ஆகியவைகள் வீட்டில் உள்ளவர்கள் அதற்காகவே மெனக்கெட்டு கொண்டு வந்து போட்டு மாட்டை வளர்த்தார்கள். அப்போது மாடுகள் கொடுக்கும் பால் ருசியாகவும் உடம்புக்கு ஆரோக்கியமானதாகவும் இருந்தது. ஆனால் இன்று நகரப்புறமாக இருந்தாலும் கிராமப்புறமாக இருந்தாலும் மாடுகளுக்கு புல்லு, தழை என்பது ஒரு எட்டா கனியாகவே மாறி உள்ளது.
மேலும் மாடுகளுக்கு கொட்டகை அமைத்து அல்லது பட்டி கட்டி வளர்க்கும் பழக்கமும் படிப்படியாக நமது மக்களிடம் குறைந்து விட்டது. இதற்கு மாறாக மாடுகளை காலையில் அவிழ்த்து விட்டால் எங்கேயாவது சென்று மேய்ந்து மீண்டும் வீடு வந்து விடும் என்ற எண்ணத்திலும், வந்த மாட்டின் பாலை கறந்து லாபம் பார்க்கலாம் என்று எண்ணத்தில் மட்டுமே மாடு வளர்ப்பவர்கள் இருப்பதாக புதுச்சேரியை சேர்ந்த பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் கிருஷ்ணன் குற்றம்சாட்டுகிறார்.
இதுகுறித்து பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் கிருஷ்ணன் கூறும்போது, “அரசு மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று எவ்வளவு தான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பொதுமக்களாகிய நாம் இதுவரை அதை கடைபிடிப்பதில்லை, கடையில் பிளாஸ்டிக் பை மற்றும் டப்பாக்களில் வாங்கிக்கொண்டு வரும் உணவு பொருட்களை அப்படியே தூக்கி சாலையில் வீசுவதால் அதை மாடுகளும் மேய்கிறது. இப்படி பிளாஸ்டிக்கை தின்பதால் மாட்டுக்கு புற்றுநோய் ஏற்படுவதுடன் அதன் பாலை நாம் குடிக்கும் போது நமக்கும் புற்றுநோய் ஏற்படுகிறது.
மேலும் மாடு வளர்ப்பவர்கள் அதற்கென்று ஒரு கொட்டகை அமைத்து கடையில் கிடைக்கக்கூடிய மாட்டுத்தீவனங்களை வாங்கி கொடுத்து மாடுகளை வளர்த்தால் மாடுகளும் ஆரோக்கியமாக இருக்கும். நமக்கும் சத்தான பால் கிடைக்கும். மாடுகள் சாலையில் திரிவதால் விபத்துகள் ஏற்படுவதுடன் உயிர் பலியும் அவ்வப்போது நிகழ்கிறது. அது மட்டுமல்லாமல் சாலையில் கிடைக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் சிமெண்ட் சாக்குகளை மாடுகள் உண்பதால் அவற்றுக்கும் புற்றுநோய் ஏற்படுகிறது. இதுபோன்ற உணவு முறை காரணமாக தற்போது நாட்டு மாடு இனங்கள் அழிந்து வருகிறது. எனவே நாம் இருக்கும் வரை மாடு இனங்களை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொருவருக்கும் உருவாக வேண்டும்” என அவர் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Puducherry