புதுச்சேரி நகராட்சி சார்பாக வீட்டு வரி வசூல் மையம் சுனாமி குடியிருப்பு பகுதியில் அமைத்து வீட்டு வரி வசூல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுனாமி குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டில் வித்தியாசமான சுவரொட்டி ஒட்டப்பட்டு இருந்தது. அதில் தெரு விளக்கை சரி செய்யாத நகராட்சி நிர்வாகத்திற்கு ,வீட்டுவரி ஒரு கேடா ,கட்ட முடியாது, என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து பேசிய வீட்டின் உரிமையாளரும் மக்கள் நல சங்க அமைப்பாளருமான குமார், சுனாமி குடியிருப்புகள் 2012 இல் வழங்கப்பட்டது என்றும் அப்போது வீட்டு வரி யாரிடமும் வசூல் செய்யவில்லை அதனை நான் அலுவலகத்திற்கு தானாக முன்சென்று வீட்டு வரியை செலுத்த வேண்டும் என்று 2017-இல் சுனாமி குடியிருப்பில் முதல் நபராக வீட்டு வரியை கேட்டு செலுத்தியுள்ளேன் என்றார்.
2019ல் கொரோனா காலத்திலும் வீட்டு வரியை முறையாக செலுத்தியுள்ளதாகவும் மக்களின் அடிப்படை தேவைகளாக தெருவிளக்கு போன்றவற்றை நகராட்சி நிர்வாகம் அமைத்து தரவில்லை .அதனால் இனி குடியிருப்பு பகுதி தெரு விளக்குகளை சரி செய்யும் வரை வீட்டு வரியை செலுத்த போவதில்லை என்ற நிலையில் உள்ளேன் என ஆவேசமாக பேசினார்.
மேலும் புதுச்சேரி காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு பகுதியில் சுமார் 1400 குடும்பங்கள் வசிக்கின்றனர் இப்பகுதியில் சுமார் 379 தெரு விளக்கு கம்பங்கள் உள்ளன. இதில் 20 தெருவிளக்குகள் கூட சரிவர எரியாமல் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருப்பு மக்கள் இருளில் வாழும் சூழல் உள்ளது. இந்த தெரு விளக்குகளை சரி செய்ய கேட்டால் மின்சாரத்துறையும் நகராட்சி நிர்வாகமும், மாறி மாறி இழுத்தடிப்பு செய்து வந்ததாக குற்றச்சாட்டினார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதுகுறித்து மக்கள் நலச்சங்கம் சார்பில் மின்துறைக்கும் நகராட்சிக்கும் கடந்த 2021 இல் தகவல் அறியும் சட்டத்தில் கேட்ட போது, அப்போதைய நகராட்சியின் ஆணையர் அஸ்வின் சந்துரு புதுச்சேரி மின்துறையின் வேண்டுகோளின் படி காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு பகுதியில் எரியாத தெருவிளக்குகளை சீர் செய்ய தேவையான உபகரணங்களை கொள்முதல் செய்ய 16- 2- 2021 அன்று இந்த நகராட்சியில் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் தேவையான மின் உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டு மின்துறையிடம் ஒப்படைக்கப்படும் என்று கடிதம் வாயிலாக தெரிவித்தார்.
ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த ஒரு பணியையும் செய்யாமல் அமைதியாக உள்ளனர் என்றும் ஒப்பந்தம் கோரப்பட்டது உபகரணங்கள் வாங்கப்பட்டது உண்மை என்றால் இதுவரை மின் விளக்குகளை சரி செய்யாதது ஏன்? என்பதை காவல்துறை விசாரணை செய்ய வேண்டும் என மக்கள் நலச்சங்கம் சார்பில் கடந்த 2ம் தேதி புதுச்சேரி தலைமை செயலர் காவல்துறை டிஜிபி மற்றும் காலாப்பட்டு காவல் நிலையத்திலும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார் .
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Puducherry