முகப்பு /புதுச்சேரி /

7 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் தவிக்கும் புதுவை கடற்கரை வியாபாரிகள்

7 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் தவிக்கும் புதுவை கடற்கரை வியாபாரிகள்

X
7

7 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் தவிப்பு

Puducherry News : 7 ஆண்டுகளாக மின்சாரம் இல்லை, சுத்தமான குடிநீர் வசதி இல்லை, 200 கடைகள் உள்ள இடத்திற்கு ஒரே ஒரு கழிவறைதான் உள்ளது என அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளை வைக்கும் புதுவை கடற்கரை வியாபாரிகள்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி கடற்கரை சாலையில் 200-க்கும் மேற்பட்ட சாலையோர கடைகள் இருந்தன. கடற்கரைக்கு வருபவர்கள் பொருட்களை வாங்கி பயன்படுத்தி விட்டு அங்கேயே பிளாஸ்டிக் பிளேட், பிளாஸ்டிக் கப் உள்ளிட்டவற்றை போடுவதால் குப்பை கூலமாக கடற்கரை சாலை காட்சியளித்தது. இதனால் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி கடற்கரையை கலை நயத்துடன் அழகுடன் பராமரிக்க வேண்டும் என்பதற்காக, கடற்கரை சாலையில் உள்ள வியாபாரிகள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்ட புதுச்சேரி அரசு நேரு சிலை அருகே தனியாக இடம் ஒதுக்கி நகராட்சியின் மூலம் சுமார் 200-க்கும் மேற்பட்ட கடைகள் வியாபாரிகளுக்காக கட்டி கொடுக்கப்பட்டது.

வியாபாரிகளுக்காக இந்த கடைகள் கொடுக்கப்பட்டு சுமார் 7 ஆண்டுகள் ஆகியும் இதுவரை அந்த கடைகளுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை. குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை, 200 கடைகள் கொண்ட இடத்திற்கு ஒரே ஒரு கழிவறை மட்டும் கட்டப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் பலவித கஷ்டங்களை அனுபவிப்பதாக குற்றம்சாட்டி உள்ளனர்.

இதையும் படிங்க : மதுரை வழியாக செல்லும் 3 ரயில்கள் பகுதி நேரமாக ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு 

மேலும், இரவு நேரங்களில் மின்சாரம் இல்லாததால் கடுமையான இன்னல்களுக்கு ஆளான வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் கடைகள் அமைந்துள்ள இடத்தில் சாக்கடைகள் சரியாக தூர்வாரப்படாமல் இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்களும் நின்று பொருட்களை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தனது மன குமுறல்களை தெரிவித்தனர்.

இதுகுறித்து கடற்கரை வியாபாரிகள் கூறுகையில், “இது சம்பந்தமாக நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் 7 ஆண்டுகளாக அவர்கள் எங்கள் கோரிக்கையை இதுவரை நிவர்த்தி செய்யவில்லை. ஆனால் மாதா மாதம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய ஆயிரம் ரூபாய் வாடகையை செலுத்தி வருகிறோம். ஆனால் எங்களது கோரிக்கைகளை மட்டும் செவிசாய்த்து அதிகாரிகள் நிறைவேற்றி தரவில்லை” என்று  குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து வியாபாரி அருண் கூறும்போது, “கடற்கரையை அழகுபடுத்த வேண்டும் என்று கூறி தனியாக இடம் ஒதுக்கி அங்கே நகராட்சி சார்பில் கடைகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. அந்த கடைக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வாடகை வழங்கி வருகிறோம். ஆனால் கடைகள் ஒதுக்கப்பட்டு 7 ஆண்டுகளாகிறது இதுவரை மின்சார வழங்கப்படவில்லை. நாங்கள் தனியாக முதலீடு போட்டு ஜெனரேட்டர் வாங்கி அதன் மூலம் வரும் மின்சாரத்தை பயன்படுத்தி வருகிறோம். 7 ஆண்டுகளாக எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை” என்றார்.

மேலும், சுத்தமான குடிநீர் கிடையாது, பாத்ரூம் அருகே உள்ள குடிநீர் தொட்டியில் தான் தண்ணீர் எடுக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. இதை அங்கு வரும் பொதுமக்கள் பார்க்கும் போது முகம் சுளிக்கும் நிலைமையும் ஏற்படுகிறது. எனவே, எங்களது கோரிக்கையை உடனடியாக நிவர்த்தி செய்து மின்சாரம் வழங்கி, சுத்தமான குடிநீர் வழங்குவதுடன், சாக்கடைகளை உடனுக்குடன் தூர்வார வேண்டும்”என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

7 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல், சுத்தமான குடிநீர் மற்றும் கழிவறை இல்லாமல் பாதிக்கப்படும் கடற்கரை வியாபாரிகள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

First published:

Tags: Local News, Puducherry