போர் தெய்வமான கொற்றவையை இந்த நவீன காலத்திலும் பழமை மாறாமல் தமிழர்கள் வழிபடுவது வழக்கம்.அஷ்ட திக்கையும் கட்டி ஆளும் அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகி அன்னை அங்காள பரமேஸ்வரிக்கு திருவிழா எடுக்கும் சிறப்பான மாதம் ஆகும். அம்பிகை காளி வேடம் தரித்து கொற்றவையாக உருமாறிய வரலாறு தெரியுமா உங்களுக்கு?
பிரம்மனின் ஆணவத்தை அழிக்க பரமேஸ்வரன் பிரம்மாவின் ஐந்தாவது தலையை வெட்டினார். இதனால் பிரம்மஹத்தி தோஷம் அவரைப் பற்றி கொண்டது.பிரம்மனின் ஐந்தாவது தலை சிவனின் கரத்தில் பிரம்ம கபாலமாக ஒட்டிக் கொண்டது. இதனால் கோபமுற்ற சரஸ்வதி தேவியின் சிவனுக்கு சாபம் வழங்கினாள். சாபத்தால் சிவன் பிச்சாடண வடிவம் கொண்டு அலைந்தார். பார்வதியும் சிவனின்றி அகோர ரூபம் கொண்டு ஆவேசமாக சுற்றி திரிந்தார்.இறுதியில் அன்னை மயான பூமியில் ஒரு புற்றினுள்ளே பாம்புருவில் வாழ்ந்து வந்தாள்.சிவன் பிச்சையெடுக்கும் உணவனைத்தையும் அந்த பிரம்ம கபாலம் உண்டு பசியோடு சக்தியற்று அலைய வைத்தது.இறுதியில் பரமேஸ்வரி வாழ்ந்து வந்த மயான பூமிக்கு வந்து சேர்ந்தார்.
மகா விஷ்ணுவின் ஆலோசனைப்படி உமையவள் புற்றிலிருந்து வெளியேறி பெண்ணுறு கொண்டு சிவனுக்கு உணவு சமைத்தாள்.பிச்சை எடுக்க ஈசன் வந்ததும் அன்னபூரணியான அன்னை அவள் சமைத்த உணவை மூன்று கவளங்கலாக்கி கபாலத்தில் இடத் துவங்கினாள்.முதல் கவளம் இட்டதும் கபாலம் உண்டது. இரண்டாவது கவளம் இட்டதும் கபாலமே உண்டது. உணவின் ருசியில் மயங்கியது.
மூன்றாவது கவளத்தை அன்னை கபாலத்தில் இடாமல் சூரையாக வீசினால். அதை உண்ண கபாலம் கீழே இறங்கியது. ஆவேச வடிவம் கொண்டு அன்னை கீழே இறங்கிய கபாலத்தை காலில் மிதித்து சுக்கு நூறாக்கினாள். அங்காளியாக மயான பூமியில் ஆவேச நடனம் புரிந்தாள். அவளை சாந்த படுத்தவே இயலவில்லை. ஆடிய ஆட்டத்தில் அகிலமே அதிர்ந்து அஞ்சின. அன்னை பார்த்த அனைத்தும் அவள் கோபப் பார்வையில் பட்டு அழித்தன. தேவர்களும் பயந்து நடுங்கினர்.போர்க்கோலம் பூண்டு தேரில் ஏறிப் பயணித்தாள். தனது தங்கையான அம்பிகையை மகா விஷ்ணு தனது சக்தியால் கட்டுப்படுத்தினார். அம்பிகையும் ஆவேசம் தணிந்து நான்கு திருக்கரத்துடன் சூலம், கத்தி, உடுக்கை, கபாலத்துடன் எழுந்து அமர்ந்தாள். அங்கேயே அங்காள பரமேஸ்வரி என்ற திருநாமம் கொண்டு காட்சி கொடுத்தாள். ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் அமாவாசை அன்று அனைத்து அங்காளம்மன் கோயிலிலும் மயான கொள்ளை ஆனது விமரிசையாக நடைபெறுகிறது.
அம்பிகை பிரம்ம கபாலத்திற்கு சூரையிட்டதனால் மாசி அமாவாசை அன்று மயானத்தில் இன்றும் சூரையிடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.அன்னை அனைத்து பேய், பிசாசுகளுக்கும் அன்று உணவை சூரையிடுகிறாள் என்பது ஐதீகம். அதை உண்டு அவற்றாள் தன் மக்களுக்கு எவ்வித தீங்கும் வரக்கூடாது என்பதற்காக சூரை இடப்படுகிறது.காட்டேரி, பாவாடை ராயன், அங்காளி வேடமிட்டவர்கள் ஆவேசமாக ஆடிக் கொண்டே அமாவாசையில் மயானத்திற்கு சென்று பூஜைகள் நடத்தி கிழங்கு, அவரை, முட்டை, சாதம் அனைத்தும் கலந்து சூரையாக வீசுகின்றனர்.அதன்படி புதுவை வம்பாகீரப்பாளையம் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் உள்ளது.
இவ்வாலயத்தின் மாசி மாத பிரம்மோற்சவ விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயானக்கொள்ளை விழா அன்று அம்பிகை 16-கைகள் கொண்ட காளியாக அலங்கரிக்கப்பட்ட தேரில் வைக்கப்பட்டு கோவிலில் இருந்து வம்பாகீரப்பாளையம் கலங்கரை விளக்கு பகுதியில் உள்ள மயானம் அருகே ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. ஊர்வலத்தின் போது தேர் மெல்ல சாய தொடங்கியது. இதனை கண்ட பக்தர்கள் பதைபதைத்து தேரை சாயாத படி தாங்கி நின்றனர். தொடர்ந்து நடைபெற்ற மயான கொள்ளை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Car Festival, Festival, Local News, Puducherry