புதுச்சேரியில் 12 வருடங்களாகக் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட நபர்கள், பெட்ரோல் இல்லாத வண்டியால் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளனர்.
புதுச்சேரியில் கஞ்சா கடத்தலைத் தடுக்கும் வகையில் "ஆப்ரேஷன் விடியல்" என்ற பெயரில் சிறப்புச் சோதனை நடைபெற்றுவருகிறது. புதுச்சேரி சுற்றுலா தளமாகத் திகழ்வதினால், தொடர்ந்து கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் விற்பனை சட்டவிரோதமாக நடைபெறுகிறது. இதனைத் தடுக்க புதுச்சேரி அரசு தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சேதராப்பட்டு தொழில்பேட்டை பகுதியில் வடமாநில தொழிலாளர்களுக்குக் கஞ்சா விற்கப்படுவதாக காவல்துறைக்குத் தகவல் வந்தது. காவல் கண்காணிப்பாளர் பக்தவச்சலம் உத்தரவின் பேரில் சேதுராப்பட்டு உதவி ஆய்வாளர் ராஜேஷ், ஏஎஸ்ஐ கண்ணன் மற்றும் இதர போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்தவழியாக இருசக்கர வாகனத்தைத் தள்ளிக்கொண்டு இரண்டு பேர் வந்துள்ளனர். சந்தேகத்தின் பெயரில் விசாரித்ததில், பெட்ரோல் இல்லாமல் தள்ளிக்கொண்டு வருவதாகக் கூறியுள்ளனர். அவர்களின் வாகனத்தில் சோதனை நடத்தியதில் 1.5 கிலோ கண்டறியப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து, கஞ்சாவைக் கைப்பற்றி இருவரையும் சேதராப்பட்டு காவல் நிலையம் அழைத்து சென்றனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஒருவரின் பெயர் கமலா காந்தடலை (32) என்றும், ஒடிசா மாநிலம் பாலசூர் மாவட்டம் பல்கந்தடா பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இவர் சேதராபட்டில் உள்ள தனியார் கேபிள் தயாரிக்கும் தொழிற்சாலையில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். மற்றொருவர் பெயர் ராமச்சந்திர மாலிக் (21) என்பதும், இவரும் அதே தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார் என்பது தெரியவந்தது.
தீவிரமாக நடத்திய விசாரணையில், கமலா காந்தடலையின் சொந்த ஊரான ஒடிசாவிற்கு விமானத்தில் சென்று அங்கிருந்து கஞ்சாவை வாங்கி, ரயில் மூலம் புதுச்சேரிக்கு கடத்தி வந்து வியாபாரியிடம் விற்பனை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அங்கிருந்து ரூ.6000க்கு வாங்கி வந்து, இங்கு ரூ.50 ஆயிரத்திற்கு விற்பனை செய்துள்ளனர். கடந்த 12 வருடங்களாக இவர்கள் இருவரும் புதுச்சேரியில் வசிக்கும் நிலையில், ஒவ்வொரு முறை ஊருக்கு செல்லும் போதும் இதை செய்து வந்துள்ளனர். கஞ்சா கடத்திய வழக்கில் இருவரையும் போலீசார் கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர்.
விமான மூலம் சென்று ரயில் வழியே 12 வருடங்களாகக் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர்கள் வண்டியில் பெட்ரோல் இல்லாத காரணத்தினால் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cannabis, Crime News, Ganja, Puducherry