புதுச்சேரி காலாப்பட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரிய காலாப்பட்டில் பிரசித்தி பெற்ற ஶ்ரீசெங்கழுநீர் அம்மன் ஆலயம் உள்ளது. புதுச்சேரி சுற்றுவட்டாரத்தில் மாசிமக தீர்த்த வாரிக்கு செங்கழுநீரம்மன் செல்கிறார் என்றால் அப்படி ஒரு சிறப்பு வாய்ந்த ஒரு மாசி மகமாக அது இருக்கும். அனைத்து மக்களும் அந்த திருவிழாவில் கலந்துகொண்டு தாங்கள் நினைத்த காரியம் நிறைவேற நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.
அப்படி சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் கடந்த 55 ஆண்டுகளுக்கு முன் மாசிமக தீர்த்தவாரியில் இரு கிராமங்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக சில உயிர்களும் பலியானது. இந்த பிரச்சனையால் காலாப்பட்டு ஸ்ரீசெங்கழுநீர் அம்மன் ஆலயம் இழுத்து மூடப்பட்டது. இதனால் மாசிமக தீர்த்தவாரிக்கு அம்மன் புறப்பாடு தடைசெய்யப்பட்டது.
அன்றிலிருந்து சுமார் 55 ஆண்டு காலம் அந்த பகுதி மக்கள் அந்த கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வதில்லை. பூஜைகள் செய்வதில்லை. எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் கோவிலை திறக்காமல் மூடப்பட்டு இருந்தது. மேலும் மாசிமக தீர்த்தவாரிக்கு பக்கத்து ஊருக்கு அந்த ஊர் மக்கள் செல்வது வழக்கமாக இருந்தது. இதனால் அடுத்தடுத்து வந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் செங்கழுநீர் அம்மன் கோவில் பிரச்சனை பெரும் தலைவலியாக இருந்து வந்தது.
இதனிடையே தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கல்யாண சுந்தரம் மற்றும் முத்தியால்பேட்டை வட்ட ஆய்வாளர் தனசெல்வம் மற்றும் உதவி ஆய்வாளர் இளங்கோ ஆகியோர் பெரும் முயற்சி எடுத்து அந்த கோவிலை திறக்க ஏற்பாடுகள் செய்தனர். அதன்படி காலாப்பட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் முயற்சியாலும், போலீசார் உதவியுடன் பெரிய காலாப்பட்டு கிராம பஞ்சாயத்தார்கள் மற்றும் பொதுமக்களிடையே சமாதானம் செய்து பிரச்சனைக்கு முடிவு காணப்பட்டது.
இதையும் படிங்க : புதுச்சேரியில் பார்வையாளர்களைக் கவர்ந்த நாய், பூனை கண்காட்சி..!
இதையடுத்து, ஒருவழியாக கோவிலை திறந்து செங்கழுநீர் அம்மனை மாசிமக தீர்த்தவாரிக்கு அழைத்துச் செல்வது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி கோவில் திறக்கப்பட்டு மக்கள் வெள்ளத்தில் ஶ்ரீசெங்கழுநீர் அம்மன் சிறப்பான அலங்காரத்தில் மிதந்தபடியே மாசிமக தீர்த்தவாரிக்கு சென்றது பார்ப்பவர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்தது. இதனால் காலாப்பட்டு மற்றும் பெரிய காலப்பட்டு பகுதியில் உள்ள மக்கள் பெரும் சந்தோஷத்தில் திகைத்துள்ளனர்.
மேலும் 55 ஆண்டுகால பிரச்சனைக்கு தீர்வு கண்டு அம்மனை ஆலயத்தில் இருந்து வெளியே கொண்டு வரவும் இரு கிராமங்கள் இடையிலான ஒற்றுமையை பலப்படுத்தவும் பாடுபட்ட தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம், வட்ட ஆய்வாளர் தன செல்வம், உதவி ஆய்வாளர் இளங்கோ ஆகியோருக்கு பொதுமக்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து கொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Puducherry