உலக அளவில் 350 வகை நாய் இனங்களுக்கு மட்டுமே அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அவற்றுள் 7 வகை இந்தியாவைச் சேர்ந்ததாகும். அவற்றுள் ராஜபாளையம், கன்னி, கோம்பை மற்றும் சிப்பிப்பாறை ஆகிய நான்கு வகைகள் தமிழகத்தைச் சேர்ந்த இனங்களாகும். நமது ஆசிய கண்டத்திலேயே 5 வகை நாய்கள்தான் ஒரே நிறத்தில் குட்டி போடும் என்கின்றனர். அதில் ஒரு வகைதான் ராஜபாளையம் நாய். தமிழகத்தைச் சேர்ந்த நாட்டு இனமான இது இயல்பிலேயே சிறந்த வீரமும், விசுவாசமும் அதிகம் கொண்டவை என்று சொல்லப்படுகிறது.
இந்த ராஜபாளையம் நாயின் காதுமடல்கள் மடங்கியும், உறுதியாகவும் கால்கள் நேராகவும் இருக்கும். வால் பகுதியை தடவிப்பார்த்தால் ஆங்காங்கே கணுக்கள் போன்றும், பார்ப்பதற்கு அரிவாள் போன்றும் தோற்றமளிக்கும். இந்த வால் தூக்கி நிற்கும். தலை சிறியதாகவும் முகம் கூறான அமைப்பிலும் இருக்கும். நெஞ்சுப்பகுதி சற்று இறங்கியும், வயிற்றுப்பகுதி கொஞ்சம் ஏறியும் வாலின் அடிப்பகுதி தடித்தும், நுனிப்பகுதி மெல்லியதாகவும் இருக்கும். பொதுவாக, பார்ப்பதற்கு இந்த நாயினம் ஒல்லியாக இருக்கும்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இந்த வகை நாய்கள் பண்ணை வைத்து வளர்க்கப்படுகின்றன. இந்த நாய் குட்டிகள் சுமார் 10 ஆயிரம் ரூபாயில் இருந்து விற்பனை செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. அதே சமயம், இங்கே களப்பின நாய்களும் விற்பனை செய்யப்படுகின்றன. எனவே, ராஜபாளையம் நாய் வாங்க விரும்புகிறவர்கள் இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு வாங்கவேண்டும் என்று சொல்கின்றனர் அப்பகுதி மக்கள்.
2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் நாள் பிரதமர் நரேந்திர மோடி, ‘மன் கி பாத்’ என்ற (மனதின் குரல்) வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றிய போது, “இந்தியாவின் நாட்டு வகை இனங்களான தமிழ்நாடு மாநிலம், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மற்றும் சிப்பிப்பாறை வகை நாய்களை வீடுகள்தோறும் வளர்க்க வேண்டும். வீட்டுக்கு காவல்புரிந்து சிறந்த பாதுகாப்பு அளிப்பவை” என புகழ்ந்து கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.