ரயிலில் நெடுந்தூர பயணம் என்றால், நம்மில் பலருக்கும் பிடித்த ஒன்றுதான். ஏனென்றால் ரயில் பயணங்கள் என்பதை நம்மால் அவ்வளவு எளிதாக மறந்து விடமுடியாது. அத்தகைய ரயிலில் அன்றாடம் பயணிக்கும் நாம் என்றாவது தண்டவாளத்தில் கற்கள் எதற்காக கொட்டப்படுகின்றன என்று யோசித்திருக்கிறோமா..? வாருங்கள் இந்த பதிவில் ரயில்வே தண்டவாளங்களுக்கு இடையில் ஏன் கருங்கல் ஜல்லி கொட்டப்படுகின்றன என்பதைப் பற்றி தெரிந்துகொள்ளலாம். ரயில் தண்டவாளங்களில் கொட்டப்பட்டுள்ள கருங்கல் ஜல்லிக்கு 'Track Ballast' என்று பெயர். தண்டவாளங்களில் இவற்றைப் பயன்படுத்துவதற்கு பல தொழில்நுட்ப காரணங்கள் உள்ளன.
ரயில் தண்டவாளங்களை வைப்பதற்கான தளமாக இவை உருவாக்கப்படுகின்றன. அதாவது தரையின் மேலே கற்களைக் கொட்டித் தளம் அமைத்து அதன் மேலேயே ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்படுகின்றன. ரயில் தண்டவாளங்கள் தண்ணீரில் அதிக நேரம் மூழ்கி இருக்க நேர்ந்தால் துருப்பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அவை ரயில் தடங்களை சரியான இடத்தில் வைத்திருக்கவும், தண்ணீர் அடிக்கடி இருப்புப் பாதையில் செல்வதையும் தடுக்கிறது. ரயில் பாதைகளில் தண்ணீர் வருவதை இது முற்றிலும் தடுக்கவில்லை என்றாலும், தண்டவாளத்தின் அடியில் அல்லது அதைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள, அது சரியான வடிகால் வசதியை வழங்குகிறது.
பொதுவாக ரயில் பெட்டிகள் எவ்வளவு கனமானது என்பதை நாம் அனைவரும் அறிவோம். தண்டவாளத்தின் மீது இத்தகைய கனமான ரயில் பெட்டிகள் கடந்து செல்வது கடும் அதிர்வுகளை ஏற்படுத்துகிறது, இந்த பலத்த சப்தத்தால் அருகிலுள்ள கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகள் நாளடைவில் பாதிக்கப்படலாம். அத்தகைய அதிர்வுகளை இந்த கூர்மையான கருங்கற்கள் இறுக்கமாகப் பிடித்து கொண்டிருப்பதால் அதிர்வுகளை கடத்த விடாமல் உள்வாங்கிக் கொள்கின்றன.
இதனால் இருப்புப் பாதையை இறுக்கமாக பிடித்துக்கொள்வது மட்டும் அல்லாமல் அருகில் உள்ள கட்டமைப்புகள் கடும் அதிர்வுகளால் பாதிக்கப்படாமல் தடுக்கப்படுகிறது. கற்களின் முக்கியமான பணி ரயில் தண்டவாளங்களைப் பாதுகாப்பதுதான். தொடர்ந்து பல ரயில்கள் தண்டவாளத்தில் ஓடினாலும், அதன் அதிர்வைத் தாங்கிக் கொண்டு தண்டவாளங்கள் அதன் இடத்தில் இருந்து விலகாமல் பார்த்துக் கொள்வது இந்தக் கற்கள்தான். மேலும் இந்த கற்கள் தண்டவாளத்தில் வளரக்கூடிய தாவரங்களை வளரவிடாமல் தடுக்கிறது.
சிறிய ஜல்லிக் கற்கள் தவிர, கான்கிரீட்டால் செய்யப்பட்ட நீண்ட தகடுகளும் ரயில் பாதையில் வைக்கப்பட்டு, அதில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை ஸ்லீப்பர்கள் என்று அழைக்கப்படுகின்றன. ட்ராக் பேலாஸ்ட்கள் இந்த ஸ்லீப்பர்களுக்கு நிலைத்தன்மையையும் அளிக்கின்றன. ரயில் கடந்து செல்லும் போது, ஸ்லீப்பர் மற்றும் பேலஸ்ட் கலவை அதன் எடையை மட்டுமே தாங்கி, விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
எல்லாக் கற்களையும் ரயில் தண்டவாளங்களில் பயன்படுத்த முடியாது. அதில் பயன்படுத்தக்கூடிய கற்கள் கரடுமுரடாக இருக்க வேண்டும், கூர்மையான முனைகளைக் கொண்டிருக்க வேண்டும். தண்டவாளங்களைப் போல இந்தக் கற்களையும் அடிக்கடி பராமரிக்க வேண்டும். இதனைப் பராமரிப்பதற்கென்றே Ballast Cleaning Machines (BCM) பயன்படுத்தப்படுகின்றன.