உலகின் மர்மம் விலகாத எத்தனையோ ஆச்சரியங்களில் ஒன்று டைனோசர்கள். மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் இந்த விலங்குகள் வாழ்ந்ததாக கூறப்பட்டாலும், அதன் தோற்றம், உயரம் ஆகியவை குறித்து இன்னும் நமக்கு சந்தேகங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனாலும் புதை படிமங்களாக உலகில் ஆங்காங்கே டைனேசர்களின் எலும்புக் கூடுகள் கிடைத்துக் கொண்டு தான் இருக்கின்றன. முதன் முதலில் 1902ஆம் ஆண்டு ஒரு டைனோசர் எலும்புக் கூட்டை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.
கிட்டத்தட்ட 42 அடி நீளம் இருந்தது இந்த எலும்புக் கூடு. அந்த எலும்புக் கூட்டின் தலை மட்டும் 900 கிலோ. அதன் வாய்க்குள் 58 பற்கள் இருந்துள்ளன. மிகப் பிரம்மாண்டமாக இருந்துள்ளது அந்த எலும்புக் கூடு. அதற்கு ரெக்ஸ் எனப் பெயர் வைத்து பாதுகாத்து வந்தார்கள் விஞ்ஞானிகள். அதன் பிறகு எத்தனையோ இடங்களில் டைனேசர்களின் எலும்புக் கூடுகள் கிடைத்துள்ளன. ஆனால் ரெக்ஸ் அளவிற்கு கிடைக்கவில்லை.
கடந்த மாதம் சுவிட்டர்லாந்தில் டிரினிடி ரெக்ஸ் டைனோசரின் எலும்புக் கூடு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. அதை மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்து வாய் பிளந்து சென்றார்கள் மக்கள். அப்போதே இது ஏப்ரல் மாதம் ஏலம் விடப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.அதன்படி சுவிட்சர்லாந்து நாட்டின் ஜூரிச் நகரில் ஏலம் நடைபெற்றது.
ஏலத்தின் தொடக்க மதிப்பாக 4.8 மில்லியன் சுவிஸ் ஃபிராங்க் என அறிவிக்கப்பட்டது. முடிவில் 5.5 சுவிஸ் ஃபிராங்க் மதிப்பில் ஏலம் எடுக்கப்பட்டது. இது இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் 49 கோடி ரூபாயாகும். ஐரோப்பாவை சேர்ந்த அரியவகை எலும்புக் கூடுகளை சேரிக்கும் ஒருவர் இந்த ரெக்ஸ் டைனேசரின் எலும்புக் கூட்டை விலைக்கு வாங்கியுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் விற்பனை செய்துள்ளார். விற்றவர் மற்றும் வாங்கியவரின் விபரங்கள் வெளியிடப்படவில்லை.