இன்றைய வேக உலகில் எல்லாருக்கும், எல்லாவற்றிற்குமே அவசரம். அவற்றில் ஒன்று தான் ஃபாஸ்ட் ஃபுட் எனப்படும் துரித உணவு. துரித உணவு இன்று பலரின உணவுப் பழக்கவழக்கத்தையே மாற்றியிருக்கிறது. ஊருகாயுடன் பழைய சோறும், சாம்பார், தயிர் சாதமும் சாப்பிட்டு வந்த நம்மில் பலரும் இன்று பீசா, பர்கருக்கு மாறி விட்டோம். இன்று எத்தனையே பர்கர் பிராண்டுகள் இருந்தாலும் அவற்றிற்கெல்லாம் முன்னோடி மெக்டொனால்ட்ஸ் தான். இன்று 100க்கும் மேற்பட்ட நாடுகளில் 40ஆயிரத்திற்கும் அதிகமான கிளைகளோடு மிகவும் வெற்றிகரமான நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.
அந்நிறுவனத்தின் ஒரு நாளைய வியாபாரம் பல மில்லியன் டாலர்கள். ஆனால் அந்நிறுவனம் தொடங்கப்பட்ட அன்று முதல் நாள் வியாபாரம் எவ்வளவு தெரியுமா? 366 டாலர்கள். அதாவது இன்னைய இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 30ஆயிரம் ரூபாய். எப்படி சாத்தியமானது இந்த வெற்றி? திட்டமிடல், கடும் உழைப்பு, நேர்மை மற்றும் தரம் இருந்தால் இது சாத்தியமே. அப்படி சாதனையாளரான சாதாரண மனிதன் தான் ரே க்ரோக்.
பள்ளி இறுதிப் படிப்பைக் கூட முடிக்காத ஒருவர் இந்த நிறுவனத்தை தனது 52 ஆவது வயதில் தொடங்கினார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் இரண்டாம் உலகப் பொர் நடைபெற்ற போது சேவை மனப்பான்மையுடன் செஞ்சிலுவை சங்கத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார் ரே க்ரோக். போர் முடிந்ததும் மில்க் ஷேக் இயந்திர விற்பனையாளரக அமெரிக்கா முழுவதும் சுற்றினார். அப்போது அவருக்கு கிடைத்தது மெக்டொனால்ட் சகோதரர்களின் அறிமுகம். கலிஃபோர்னியாவில் சான் பெர்டினார்டினோ என்ற பகுதியில் டிக் மெக்டொனால்ட் மற்றும் மேக் மெக்டொனால்ட் என்ற சகோதரர்கள் என்ற இரண்டு சகோதரர்கள் ஒரு ஹம்பர்கர் உணவகத்தை நடத்தி வந்தனர்.
1954 ஆம் ஆண்டில் அந்த சகோதரர்கள் எட்டு மில்க்ஷேக் இயந்திரங்களை ரே க்ரோக்கிடமிருந்து வாங்கினர். ஏன் அவர்களுக்கு இத்தனை இயந்திரங்கள் தேவைப்படுகிறது என்று வியந்த ரே க்ரோக் உணவகத்தைச் சென்று பார்வையிட்டார். மக்கள் வரிசை கட்டி நின்று உணவு வகைகளை வாங்கிச் செல்வதை பார்த்தார் ரே. அந்த உணவகத்தின் தூய்மையும், எளிமையும், உணவின் நியாயமான விலையும் அதிக நேரம் காக்க வைக்காமல் உணவை விரைவாகத் தயாரித்த விதமும் அவரை வெகுவாகக் கவர்ந்தன. நாம் ஏன் இது போன்ற உணவகத்தை தொடங்கக் கூடாது என்று யோசித்த ரே, ஏன் இதே உணவகத்தின் கிளையை வேறு பகுதியில் தொடங்கக் கூடாது என யோசித்தார்.
உடனடியாக மென்டொனால்ட் சகோதரர்களிடம் பேசி அதே போன்ற உணவகங்களை ‘franchised’ எனப்படும் நிறுவன உரிமம் முறையில் நாடு முழுவதும் திறக்கலாம் என்று ஆலோசனை கூறியதோடு தானே அதற்கு முகவராக இருப்பதாகவும் கூறினார். அந்த சகோதரர்களும் அதற்கு ஒப்புக் கொண்டனர். இதையடுத்து அடுத்த ஆண்டே அதாவது 1955 ஆம் ஆண்டு தனது முதல் மெக்டொனால்ட்ஸ் உணவகத்தை இலினோயின் டெஸ் பிளெய்ன்ஸ் என்ற பகுதியில் திறந்தார். உணவகம் நல்ல லாபம் தர நாட்டின் மற்ற பகுதிகளில் மெக்டொனால்ட்ஸ் உணவகங்களை ‘franchised’ அடிப்படையில் திறப்பதிலேயே ரே அதிக கவனம் செலுத்தினார். ஆறு ஆண்டுகள் கழித்து மெக்டொனால்ட் சகோதரர்களுக்கும், ரேக் க்ரோக்கிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதையடுத்து மெக்டொனால்ட் சகோதரர்களிடம் பேசி 2.7 மில்லியன் டாலரைக் கொடுத்து மெக்டொனால்ட்ஸ் உணவகத்தின் ஒட்டு மொத்த உரிமையையும் பெற்றார் ரே க்ரோக். ஆனால் தங்கள் முதல் உணவகத்தை மட்டும் விற்க அந்த சகோதரர்கள் மறுத்து விட்டனர். அதற்கு ஒப்புக்கொண்ட ரே அந்த உணவகத்திற்கு நேர் எதிரே ஒரு மெக்டொனால்ட்ஸ் உணவகத்தைத் தொடங்கினார். இதையடுத்து அந்த சகோதரர்கள் தங்கள் சொந்த உணவகத்தை மூட வேண்டியதாயிற்று. இதையடுத்து ஐந்தே ஆண்டுகளில் அமெரிக்கா முழுவதும் 200 கிளைகளை திறந்தார் ரே க்ரோக். தொடர்ந்து ரஷ்யா, சீனா என தனது சிறகை உலகம் முழுவதும் விரித்தார்.
அதன் பயன் இன்று உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் 40ஆயிரம் கிளைகளோடு பரந்து விரிந்து நிற்கிறது மெக்டொனால்ட்ஸ். தங்க நிற ‘M’ வடிவத்தை தனது சின்னமாக ரே வடிவமைக்கும் போது அவருக்கு தெரியாது பின்னாளில் உலகின் மறக்க முடியாது சிம்பள்களில் இந்த சிம்பிள் M-ம் இடம் பிடிக்கும் என்று. அப்படி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது மென்டொனால்ட்ஸ். மெக்டொனால்ட்சின் வளர்ச்சிக்கும் முக்கிய காரணம் அதன் சுவையும் தரமும் தான். அமைந்தகரையில் இருக்கும் மெக்டானால்ட்ஸ்-ல் பர்கர் சாப்பிட்டுவிட்டு அமெரிக்காவில் இருக்கும் மெக்டொனால்ட்ஸ்-ல் நீங்கள் போய் ஒரு பர்கரை சாப்பிட்டு பாருங்கள். இரண்டின் சுவையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும்.
அவர்களின் உணவு தயாரிக்கும் ஃபார்முலா அப்படி. அதோடு காலத்துக்கேற்ப சுவையிலும் வடிவிலும் மாறி மாறி பல விதமாக வந்து கொண்டே இருக்கிறது. மேலும் மாறும் சுவைகளுக்கு ஏற்றவாறு ஹம்பர்கரைத் தவிர்த்து மீன், கோழி பர்கர்களும்,சைவ பர்கர், என வெரைட்டிகளின் வரிசையும் கூடியுள்ளது. “நான் ஒரே இரவில் உயரத்தை தொட்டதாக சிலர் கிண்டலடிக்கிறார்கள். ஆம் ஒரே இரவில் தான் உயர்ந்தேன். ஆனால் அந்த இரவின் நீளம் 30 ஆண்டுகள்”… கிரைண்டிங் இட் அவுட் என்ற தனது சுய சரிதத்தில் ரே எழுதியுள்ள வார்த்தைகள் இவை. ஆம்..ஒரே இரவில் கிடைப்பதல்ல வெற்றி…திறமையோடும் பொறுமையோடும் காத்திருந்தால் மட்டுமே வெற்றியை சுவைக்க முடியும்.