கணவன், மனைவி வாழும் ஒரு வீட்டில் மூன்றாவது ஒரு பெண் வருகிறார் என்றால், திருமணம் கடந்த உறவை அந்தக் கணவர் முன்னெடுத்து விடுவார் என்ற சந்தேகம் எழுவதுதான் இயல்பு. ஆனால், இங்கு பெண்கள் இருவரும் தங்களுக்குள் உறவை ஏற்படுத்திக் கொண்டு தன்பாலின ஈர்ப்பாளர்களாக மாறிய நிலையில், கணவரும் அதை ஏற்றுக் கொண்டுள்ளார்.
முதலில் தனிக் குடும்பம் : அமெரிக்க வாழ் இந்தியரான சன்னி என்பவர், கடந்த 2003ஆம் ஆண்டில் இந்தியாவில் வசித்து வந்த ஸ்பீட்டி சிங் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். திருமணம் நடந்து ஓராண்டுக்குப் பிறகு தன்னுடைய பழைய காதல் கதையை கணவரிடம் ஸ்பீட்டி சிங் பகிர்ந்து கொண்டார். அதாவது, தனக்கு 18 வயது இருக்கும்போது மற்றொரு பெண்ணுடன் லெஸ்பியன் தொடர்பில் இருந்தது குறித்து அவர் தெரிவித்தார். இதை கணவர் சன்னி ஆமோதித்து, தொடர்ந்து ஸ்பீட்டியுடன் வாழ்க்கை நடத்தி வந்தார்.
புதிதாக வந்த பித்து கௌர் : அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் வாழ்ந்து வந்த பித்து கௌர் என்ற இந்திய வம்சாவளி பெண்ணுக்கு கடந்த 2009ஆம் ஆண்டு மற்றொரு இந்தியருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால், திருமணம் நடந்த சில மாதங்களிலேயே இந்த தம்பதியர் விவாகரத்து பெற்றனர். தன்னுடைய முன்னாள் கணவரிடம் இருந்து விலகியிருக்க நினைத்த பித்து கௌர், இண்டியானா மாகாணத்திற்கு குடிபெயர்ந்தார்.
மலர்ந்த புதிய உறவுகள் : இண்டியானாவில் சன்னி - ஸ்பீட்டி சிங் தம்பதியரின் அறிமுகம் பித்து கௌருக்கு கிடைத்தது. மண வாழ்க்கையில் பிரிவு ஏற்பட்டு உடைந்து போயிருந்த இந்தப் பெண்ணுக்கு ஆறுதலாக இருக்கட்டும் என்று எண்ணி, அந்த தம்பதியர் அவர்களது வீட்டுக்கு இந்தப் பெண்ணை ஒரு வாரம் தங்கியிருக்க அழைத்தனர்.இந்த சமயத்தில் ஸ்பீட்டி சிங்குடன் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பித்து கௌருக்கு நெருக்கம் ஏற்பட்டது. இந்த விவகாரம் சன்னிக்கு தெரிய வந்தபோது அவர் இவர்களது காதலை ஏற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் பித்து கௌரை இரண்டாவது மனைவியாக ஏற்றுக் கொண்டார். இந்த உறவின் மூலம் மேலும் இரண்டு குழந்தைகள் பிறந்தன.
புறக்கணித்த உறவுகள் : சன்னி - ஸ்பீட்டி சிங் - பித்து கௌர் என்ற முத்தரப்பு வாழ்க்கை முறை பிற உறவினர்களுக்கு தெரிய வந்தது. இந்த உறவை கைவிடாவிட்டால் இனி எந்தவொரு பந்தமும் கிடையாது என்று உறவினர்கள் நிபந்தனை வைத்தனர். ஆனால், நிபந்தனையை நிராகரித்த இந்த முத்தரப்பு காதலர்கள் தொடர்ந்து தங்கள் விருப்பம்போல வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். மூவரும் ஒரே வீட்டில் இணைந்து வாழும் நிலையில், இயல்பாக தங்களுக்குள் எழக் கூடிய பொறாமை உணர்வுகள் மற்றும் பாதுகாப்பின்மை எண்ணங்கள் என பல சவால்களை கடந்து இந்த முத்தரப்பு பந்தம் உறுதியாக இருக்கிறது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.