இந்திய நாடு வினோதங்களுக்கும் விந்தைகளுக்கும் பெயர் போனது. தினந்தோறும் விதவிதமான, யாரும் நினைத்துக் கூட பார்க்காத புதிய விஷயங்கள் நம்மை சுற்றி நடந்து கொண்டிருக்கும். அதிலும் முக்கியமாக திருடு போதல் என்பது உலகம் முழுவதும் நடக்கும் பொதுவான விஷயமாக இருந்தாலும், இந்தியாவில் நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத சில விசித்திரமான திருட்டு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. உதாரணத்திற்கு ஒரு முழு செல்போன் டவரே திருடு போன சம்பவம் நடந்துள்ளது.
இதில் வேடிக்கை என்னவெனில் மொபைல் டவர் திருடும்போது அனைவரும் கண் முன்னாடி அதனை ஒவ்வொரு பகுதியாக கழட்டி எடுத்துக்கொண்டு போனார்கள். அது திருடப்பட்டுள்ளது என்பதையே மொபைல் டவர் முழுவதும் திருடு போன பின்பு தான் மக்கள் அதனை உணர்ந்து கொண்டு உள்ளார்கள். அது போலஇந்தியாவில் அரங்கேறி உள்ள நான்கு விசித்திரமான திருட்டு சம்பவங்களை பற்றி இப்போது பார்ப்போம்.
இரண்டு கிலோமீட்டர் நீள ரயில்வே தண்டவாளம் : பிகாரின் சமஸ்திபூர் மாவட்டத்தில் இந்த திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது. லோகத் சர்க்கரை ஆலையுடன் பாண்டாவுல் ரயில்வே நிலையத்தை இணைக்கும் தண்டவாளத்தை தான் திருடர்கள் களவாடியுள்ளார்கள். அந்த சர்க்கரை ஆலை கடந்த சில வருடங்களாக செயல்படாமல் மூடிய நிலையில் இருந்ததால், அந்த பகுதியிலும் ஆள் நடமாட்டம் குறைவாக இருந்துள்ளது. இதனை பயன்படுத்தி திருடர்கள் மிக எளிதாக இந்த திருட்டு சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். இதனோடு தொடர்புடைய இரண்டு ரயில்வே படை பாதுகாப்பு அதிகாரிகளும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
29 அடி உயர மொபைல் டவர் : குழுவாக திருடர்கள் பலர் சேர்ந்து கொண்டு பாட்னாவில் உள்ள சப்சி பாக் பகுதியில் உள்ள முழு மொபைல் டவரை களவாடியுள்ளனர். 2006 ஆம் ஆண்டு ஏர்செல் நிறுவனத்தால் நிறுவப்பட்ட இந்த மொபைல் டவர் ஆனது பிறகு ஜி டி எல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. தொலைத் தொடர்பு நிறுவன பணியாளர்களின் உதவியை கொண்டு இந்த திருடர்கள் 29 அடி உயர செல்ஃபோன் டவரை களவாடியுள்ளனர். சமீபத்தில் இந்தியா முழுவதும் 5 ஜி சேவைகளை துவங்குவதற்கு செய்யப்பட்ட சோதனையின் போது தான் மொபைல் டவர் திருடுபோய் உள்ளதே தன் நிறுவன அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
60 அடி நீள இரும்பு பாலம் : இது யாராலும் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒரு விசித்திரமான திருட்டு சம்பவமாகும். பீகாரில் உள்ள ரோதாஸ் மாவட்டத்தில் ஒரு முழு இரும்பு பாலத்தை திருடர்கள் களவாடியுள்ளனர். திருடர்கள் தங்களை அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட மாநில நீர் பாசனத்துறை அதிகாரிகளாக மற்றவர்களிடம் கூறிக்கொண்டு ஊர் மக்கள் முன்னிலையில் கருவிகளைக் கொண்டு முழு இறும்பு பாலத்தை சிறிது சிறிது துண்டுகளாக வெட்டி களவாடியுள்ளனர். விஷயத்தின் வீரியத்தை அறிந்து கொண்டு அதிகாரிகள் அந்த இடத்திற்கு விரைந்து வரும் முன்னரே திருடர்கள் அந்த பாலத்தை களவாடி விட்டனர்.
ஒரு கிலோமீட்டர் நீள சாலை : ஒரு முழு சாலையை களவாடியுள்ள விசித்திரமான சம்பவமும் மத்திய பிரதேசம் சித்தி மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. ஒரே ராத்திரியில் இந்த திருட்டு சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த நாள் காலை இந்த திருட்டு சம்பவத்தை அறிந்த மக்கள் உள்ளூர் காவல் நிலையத்தை அணுகி புகார் தெரிவித்தனர். அதை முந்தைய நாள் இரவு வரை அந்த சாலை இங்கு இருந்ததாகவும், ஒரே இரவில் களவாடப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் மழைக்காலங்களின் போது அந்த சாலை பயன்படுத்த முடியாத வண்ணம் இருக்கும் என்பதையும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். சில சமயங்களில் உள்ளூர் மக்களே ,அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை வெளிச்சத்திற்கு கொண்டுவர இது போன்று சில விசித்திரமான செயல்களில் ஈடுபடுவதாகவும் செய்திகள் உலா வருகின்றன.