தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலய திருக்கோவில்களில் ஒன்றான நெல்லையில் அமைந்துள்ள சுவாமி நெல்லையப்பர்- காந்திமதியம்மன் திருக்கோவிலில் காந்திமதி என்ற யானை உள்ளது. 52 வயதாகும் யானை காந்திமதிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்டுதோறும் நடைபெறும் யானைகள் புத்துணர்வு முகாமுக்கு அனுப்பப்பட்டு யானையின் உடல் எடை குறைப்பு மற்றும் யானையின் உடல் நன்மைக்காக மருத்துவர்களின் பரிந்துரை பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தினமும் யானை காந்திமதி கோவில் வளாகத்தை சுற்றி சுமார் ஐந்து கிலோமீட்டர் வரை நடை பயணம் மேற்கொள்ளும். இதன் காரணமாக யானையின் உடல் எடை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது . வயது முதிர்வு காரணமாக சாலைகளில் யானை செல்லும் போது மிகவும் கவனத்துடன் அழைத்துச் செல்லும் நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்து வியாபாரிகள் சங்கம் மற்றும் பக்தர்கள் சார்பில் நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதிக்கு புதிய செருப்புகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு முழுவதும் அனைத்து மாதங்களிலும் திருவிழாக்கள் நடைபெறும் என்ற போதிலும் ஆனி தேர் திருவிழா சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக தேர் திருவிழா நடைபெற வில்லை. சுவாமி- அம்பாள் உள்ளிட்ட 5 தேர்கள் முழுவதும் மனித சக்தியால் இழுக்கப்படும் இந்தாண்டு தேர் திருவிழா நாளை கொடியேற்றத்துடன்தொடங்க உள்ள நிலையில் தினமும் சுவாமி - அம்பாள் ரதவீதியில் உலா வரும்போது யானை காந்திமதி முன் செல்வது வழக்கம்.
அப்போது மிடுக்கான அலங்காரத்துடன் காலில் வெள்ளி சலங்கை கட்டி யானை காந்திமதி ரத வீதிகளில் வலம் வரும். இந்த ஆண்டு புதிய வரவான செருப்பு அணிந்து புதிய தோற்றத்தில் யானை வலம் வர இருப்பதை காண பக்தர்கள் ஆர்வமுடன் இருக்கின்றனர். குழந்தைகள் சாலையில் நடந்து செல்ல கற்கள் குத்தாமல் இருக்க பெற்றோர்கள் செருப்பு வாங்கி கொடுத்து பாதுகாப்பாக நடக்க வைப்பதை போன்று யானையையும் குழந்தையாக பாவித்து பாசத்துடன் கோவில் நிர்வாகம் மற்றும் நெல்லையப்பர் கோவில் பக்தர்கள் பராமரித்து வருவது அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.