மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாராயணன் தேவன் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரம்மா. இவரும் நாராயணதேவன் பட்டியைச் சேர்ந்த மின்வாரியத்தில் தற்காலிக பணி செய்து வந்த அஜித் என்ற நபரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர்.இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால் இவர்களின் காதலுக்குப் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்துத் தனியாக வசித்து வந்துள்ளனர்.
திருமணம் முடிந்த பின்பு இருதரப்பு பெற்றோர்களுக்கும் இவர்களுடன் எந்தத் தொடர்பு இல்லாமல் தனியாகவே வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் பிறந்துள்ளது. இந்த நிலையில், எதிர்பாராத விதமாக 02.04.2022 அன்று பணிக்குச் சென்றிருந்த வீரம்மாவின் கணவரான அஜித் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இருதரப்பு பெற்றோரின் எதிர்ப்புகளை மீறி திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையைத் தொடங்கிய நான்கு ஆண்டுகளில் இரண்டு கை குழந்தைகளுடன் கணவரை தொலைத்து வாழ்க்கையில் செய்வது அறியாமல் தவித்து வந்துள்ளார் வீரம்மா. கணவரின் பெற்றோர்களும் இவரை ஏற்க மறுத்ததால் போதிய வருமானம் இன்றித் தங்கி இருந்த வீட்டுக்கு வாடகை மற்றும் குழந்தைகளுக்கு உணவளிக்க முடியாமல் மிகுந்த வறுமைக்குள்ளாகியுள்ளார் வீரம்மா.
கைக்குழந்தைக்குப் பால் வாங்க கூட முடியாமல் மிகுந்த பொருளாதார நெருக்கடியிலும் இளம் வயதிலேயே கணவரை இழந்து வாழ்க்கையில் விரக்திக்குச் சென்ற வீரம்மா, தனக்கு அரசு ஏதேனும் ஒரு பணி அல்லது கள்ளர் பள்ளியில் விதவை கோட்டாவில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர் பணியைத் தனக்கு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.