சமீப காலங்களாக தொழில்நுட்பங்கள் மூலம் பல்வேறு குற்றங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக ஸ்மார்ட்போன் மூலம் பல்வேறு மோசடி வேலைகள் நடைபெற்று வருகின்றன. அதிலும் குறிப்பாக நாம் தரவிறக்கம் செய்யும் செயலிகள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளனவா என்று சரிபார்த்து அதன் பிறகு அவற்றை நமது போனில் இன்ஸ்டால் செய்வது அவசியமானது. இல்லையெனில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டு நமது தரவுகள் அனைத்தும் வேறொருவருக்கு கசியும் அபாயம் உள்ளது.
அது போன்றதொரு சம்பவம் தான் சமீபத்தில் நடந்துள்ளது. ஆண்ட்ராய்டு டிவைசுகளுக்கான செயலிகளை தரவிறக்கம் செய்ய மிகவும் பாதுகாப்பான இடமாக கருதப்படும் கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கும் ஒரு செயலி எந்தவித அனுமதியும் இன்றி வாடிக்கையாளர்களின் மொபைல் ஸ்க்ரீனை ரெக்கார்ட் செய்து, அதனை ஒரு லிங்கின் மூலமாக அந்த செயலியை வடிவமைத்த டெவலப்பரின் சர்வருக்கு அனுப்பியுள்ளது.
ஐரெகார்டர் ஸ்க்ரீன் ரெகார்டர் (Irecorder Screen recorder) என்ற பெயர் கொண்ட ஸ்கிரீன் ரெக்கார்டர் செயலி தான் இந்த மோசடியை செய்துள்ளது. ப்ளே ஸ்டோரில் பயன்பாட்டிற்கு வந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் வரை அந்த செயலியானது யாராலும் கண்டறிய முடியாதபடி நூதனமாக இந்த மோசடி வேலையை செய்துள்ளது. லூகாஸ் ஸ்டெஃபாங்கோ என்ற பாதுகாப்பு குறைபாடுகளை பற்றி ஆராய்ச்சி செய்யும் ஒருவர்தான் இந்த மோசடி பற்றி முதலில் கண்டறிந்துள்ளார்.
இதைப்பற்றி அவரது பதிவில் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த செயலி ஆனது முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு ஒரு வருடம் கழித்து அந்த செயலிக்கான காண அப்டேட் பயன்பாட்டிற்கு வந்தது. அந்த சமயத்தில் தான் அந்த செயலியின் வடிவமைப்பாளர் இவ்வாறு வாடிக்கையாளர்களின் போனை கண்காணிக்கும் அப்டேட்டை ஆக்டிவேட் செய்துள்ளார்
இதனால் அந்த செயலியை இன்ஸ்டால் செய்து வைத்திருந்த 50,000 க்கும் மேற்பட்டோரின் தகவல்கள் டெவலப்பருக்கு கசிந்துள்ளன. இதனை கண்டறிந்த கூகுள் நிறுவனம் ப்ளே ஸ்டோரில் இருந்து அந்த செயலியை முற்றிலுமாக நீக்கி உள்ளது.ஸ்டேஃபான்கோ இது போன்ற பல்வேறு சம்பவங்களை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்கள் என இரண்டு இயங்குதளங்களிலுமே கண்டறிந்துள்ளார். அதிலும் குறிப்பாக ஸ்க்ரீன் ரெக்கார்ட் செய்ய தரவிறக்கம் செய்யப்படும் செயல்களினால் தான் இது போன்ற பிரச்சனைகள் அதிகம் உண்டாவதாக அவர் கூறியுள்ளார்.
பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட கூகுள் நிறுவனம் உடனடியாக ஐரெக்கார்டர் ஸ்கிரீன் ரெக்கார்டர் செயலியை ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கி உள்ளது. ஆனால் எந்த அளவிற்கு தரவுகளை அந்த செயலியின் உரிமையாளர் திருடி உள்ளார் என்பது தற்போது வரை தெரியவில்லை. ஏனெனில் ஏற்கனவே அவரிடம் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட யூசர்களின் தகவல்கள் பகிரப்பட்டுள்ளன. தற்போது அந்த தரவுகளை அவர் எவ்வாறு பயன்படுத்தப் போகிறார் தெரியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் இனிவரும் காலங்களில் கூகுள் தங்களுடைய பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தி டெவலப்பர்களை அவ்வபோது புதிய அப்டேட்டுகளை தங்களது வாடிக்கையாளர்களுக்கு அளிக்குமாறு கட்டாயப்படுத்த போவதாகவும் குறிப்பிட்டுள்ளது. எது எப்படி இருந்தாலும் இது போன்ற மோசடி சம்பவங்கள் நடைபெறும் போது, அவை யூசர்களின் நம்பிக்கையை வெகுவாக குறைக்கின்றன. எனவே தற்போது எங்களால் கூற முடிந்தது எல்லாம் நீங்கள் பிளே ஸ்டோர் போன்ற நம்பகத்தன்மை வாய்ந்த செயலிகளின் மூலம் மூன்றாம் தரப்பு செயலிகளை பதிவிறக்கம் செய்தாலுமே மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதுதான் என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.