ட்விட்டரை உருவாக்கியவர்களில் ஒருவரான ஜாக் டோர்சி தற்போது புதிய சமூக ஊடக தளம் ஒன்றை உருவாக்கி உள்ளார். இதன் பெயர் ப்ளூஸ்கை என்று கூறப்படுகிறது. ட்விட்டர் பயனர்களிடையே இந்த புதிய தளம் பிரபலமடைந்து வருகிறது. இந்த சமூக ஊடக தளத்தில் அமெரிக்க கட்சியின் உறுப்பினர் அலெக்ஸாண்டிரியா ஒகாசியோ-கோர்டெஸ் போன்ற முக்கிய பிரமுகர்களும் இணைந்துள்ளனர். ட்விட்டர் இயங்குதளத்தைப் போலவே இருக்கும் ப்ளூஸ்கை, எலோன் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை 'பேரழிவிற்கு' தள்ளியதை தொடர்ந்து உருவாக்கப்பட்டுள்ளது என இந்த தளத்தை உருவாக்கியவர்கள் கூறுகின்றனர். இது குறித்த மேலும் பல தகவல்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
ப்ளூஸ்கை என்றால் என்ன? : இது பிப்ரவரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்காக தொடங்கப்பட்ட சமூக ஊடக சேவையாகும். இதில் பயனர்கள் 300 எழுத்துகள் மற்றும் படங்களைக் கொண்ட குறுகிய செய்திகளை பதிவிடலாம். ப்ளூஸ்கை சமூக வலைப்பின்னலானது மாஸ்டோடன் (Mastodon) போன்ற ஒரு பரவலாக்கப்பட்ட கட்டமைப்பில் இயங்குகிறது. இது பயனர்கள் சுயாதீனமான சமூக ஊடக அனுபவங்களை உருவாக்க அனுமதிக்கிறது மற்றும் பயனர்கள் ஒரு குறிப்பிட்ட "சேவையகத்தில்" சேர்ந்து பயன்படுத்தி கொள்ளலாம். இது அதன் தனித்துவமான விதிகள், விருப்பங்கள் மற்றும் பங்கேற்பாளர்களைக் கொண்டுள்ளது.
இது எப்போது தொடங்கப்பட்டது? : ப்ளூஸ்கைக்கான யோசனை ட்விட்டரில் 2019-இல் உருவானது, ஆனால் முன்னாள் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சியின் ஆதரவுடன் 2022-இல் அதன் சொந்த நிறுவனம் உருவாக்கப்பட்டது. 2006-இல் ட்விட்டரை இணைந்து நிறுவிய டோர்சி, 2021-இல் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகினார், இப்போது ப்ளூஸ்கையின் இயக்குநர்கள் குழுவில் பணியாற்றுகிறார். ஏப்ரல் 2022-இல் ஒரு நீண்ட விவாதத்தில், ட்விட்டர் உடனான அதன் உறவுகளை குறித்து வலியுறுத்தப்பட்டது. முன்னாள் ட்விட்டர் மென்பொருள் பொறியாளர் ஜே கிராபரும் இந்த புதிய தளத்தைத் தொடங்குவதற்கு உதவுவதற்காக இணைத்து கொண்டதாக குறிப்பிடப்பட்டது.
ப்ளூஸ்கை தளம் ட்விட்டரை மிஞ்சுமா..? : ப்ளூஸ்கை தளத்தின் பயன்பாடு பல வழிகளில் ட்விட்டரைப் போலவே உள்ளது, ஆனால் இதில் முக்கிய வேறுபாடு என்னவென்றால், இது ஒரு பரவலாக்கப்பட்ட கட்டமைப்பைச் (decentralized framework) சுற்றி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம், பயனர்கள் தரவை நிறுவனத்திற்கு சொந்தமானதை விட சுயாதீன சேவையகங்களில் சேமிக்க முடியும், மேலும் எதிர்காலத்தில், பயனர்கள் தங்கள் விருப்பப்படி பயன்படுத்த தங்கள் சொந்த சேவையகங்களை உருவாக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று இந்த அறிக்கை கூறுகிறது.
தொழில்நுட்ப மட்டத்தில், ப்ளூஸ்கை தளம் ட்விட்டர் போன்ற பெரிய சமூக வலைப்பின்னல் திட்டங்களிலிருந்து வேறுபடுகிறது. மக்கள் கவனிக்கும் முக்கிய வேறுபாடு என்னவென்றால், அதைப் பயன்படுத்துபவர்கள் அதிக வேடிக்கையை விரும்புவது தான். "தங்களது ஃபீடுகளில் ஸ்க்ரோலிங் செய்யும்போது, தாங்கள் பின்தொடரும் கணக்குகளுக்கு பதிலாக தாங்கள் பின்தொடராத கணக்குகளில் இருந்து வேடிக்கையான பதிவுகள் வருகிறது என்று ஒரு பயனர் மேற்கோள் காட்டி கூறியுள்ளார்.
எலான் மஸ்க் விரும்பத்தகாத ட்வீட்களின் வெளிப்பாட்டைக் குறைப்பதாகவும், அவரது நியமனத்திற்குப் பிறகு வெறுப்பு பேச்சு குறைந்துள்ளதாகவும் கூறினாலும், உண்மை வேறு என்று மற்ற ஆய்வுகள் கூறுகின்றன. அதன்படி, எலான் மஸ்கின் நியமனத்தைத் தொடர்ந்து டிவிட்டர் தளத்தில் இன மற்றும் ஓரினச்சேர்க்கை அவதூறுகள் குறித்த பதிவுகள் அதிகரிப்பதாக கூறப்படுகிறது.