ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதிலிருந்து அதில் பல்வேறு விதமான மாற்றங்களை செய்து வருகிறார். இதனால் பல்வேறு வித விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார். ஆனால் யார் எவ்வளவு விமர்சனம் செய்தாலும் தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கும் எலான் மஸ்க் பல்வேறு மாற்றங்களை செய்து ட்விட்டர் நிறுவனத்தை ஒட்டுமொத்தமாக வேறு விதமான நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளார்.
மஸ்க் ட்விட்டரை வாங்கியதுமே முதல் கட்டமாக ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை எண்ணிக்கையை குறைக்கும் வேலையை துரிதமாக செய்தார். இதனால் உலகம் முழுவதும் ட்விட்டர் அலுவலகத்தில் பணிபுரியும் பலரும் வேலை இழந்தனர். இதைத்தொடர்ந்து ட்விட்டரில் ப்ளு டிக் வைத்திருக்கும் யூசர்கள் அனைவருமே இனிவரும் காலங்களில் கட்டணம் செலுத்தி மட்டுமே அந்த ப்ளூ டிக்கை பெற முடியும் என்று புதிய நடைமுறையை ஏற்படுத்தினார். பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும் எலான் மஸ்க் தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தார். மேலும் அதற்கேற்ற வகையில் ட்விட்டரும் மீண்டும் தனது பழைய நிலையை அடைந்துள்ளது.
மேலும் ட்விட்டரை சிறப்பாக மாற்றுவதற்காக பல்வேறு முயற்சிகளை செய்து வரும் எலான் மஸ்க் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வருடக்கணக்கில் ஆக்டிவாக இல்லாமல் இருக்கும் ட்விட்டர் கணக்குகள் அனைத்துமே கண்டறியப்பட்டு அவை நீக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் இவ்வாறு செய்யும் பட்சத்தில் பல்வேறு யூசர் நேம்கள் விடுவிக்கப்படும் எனவும், ட்விட்டரை ஆக்டிவாக பயன்படுத்துவர்கள் அந்த யூசர்நேமை பயன்படுத்திக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டர்வாசிகள் ஆனந்தம் அடைந்துள்ளனர்.
இதைப் பற்றி திங்கட்கிழமை தன்னுடைய ட்வீட்டில் குறிப்பிட்டுள்ள அவர், நாங்கள் பல ஆண்டுகளாக ஆக்டிவா இல்லாத ட்விட்டர் கணக்குகள் அனைத்தையுமே நீக்க உள்ளோம். இதனால் உங்களது பாலோவர்களின் எண்ணிக்கை குறைவதற்கு வாய்ப்புகள் உண்டு என்று கூறியுள்ளார். மேலும் இதனால் ட்விட்டரில் அந்த யூசர் நேம்கள் அனைத்தும் விடுவிக்கப்படுமா என்ற கேள்விக்கு, அவர் “ஆம்” என்று பதில் அளித்துள்ளார். இதன் காரணமாக பல்வேறு ட்விட்டர் கணக்குகள் நீக்கப்பட்ட பிறகு மிகப் பெரும் எண்ணிக்கையிலான யூசர் நேம்கள் விடுவிக்கப்படும் என்று தெரிகிறது.