தற்போது இந்தியாவின் பல பகுதிகளில் கடும் வெப்பத்தை மக்கள் தாங்க வேண்டியுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் வீடுகளில் ஏசி, கூலர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், ஏர் கூலருடன் ஒப்பிடும்போது ஏசி-க்கு செலவு அதிகம். ஏனெனில் அது அதிக மின்சாரத்தை உறிஞ்சுகிறது. பெரும்பாலானோர் தங்கள் வீடுகளில் இரவு முழுவதும் ஏசியை ஆன் செய்தவாறே தூங்குகின்றனர். இதனால் மின்சார கட்டணம் அதிகமாக வரும். அதனால் மின்சார கட்டணத்தைக் குறைக்கும் சில வழிகளை இங்கே குறிப்பிடுகிறோம்.
ஏசியை ஒருபோதும் குறைந்த வெப்பநிலையில் வைக்கக்கூடாது. ஏசியை 16 அல்லது 18 டிகிரியில் வைத்திருப்பது நல்ல குளிர்ச்சியை தருவதாக மக்கள் கருதுகின்றனர். ஆனால், பீரோ ஆஃப் எனர்ஜி எஃபிஷியன்சி (BEE) படி, மனித உடலுக்கு உகந்த வெப்பநிலை 24 டிகிரி. அதனால் வெப்பநிலையை 24 ஆக வைத்திருங்கள், இது நிறைய மின்சாரத்தை சேமிக்கும். மேலும் ஏசியில் ஒவ்வொரு டிகிரி வெப்பநிலையை அதிகரிக்கும் போதும், 6 சதவீதம் மின்சாரத்தை சேமிக்க முடியும் என பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
சம்மருக்கு முந்தைய குளிர் காலத்தில் நீங்கள் ஏசியை உபயோகிக்காமல் விட்டுவிட்டு, பிறகு சர்வீஸ் செய்யாமல் பயன்படுத்தினால், அதனால் மின் கட்டணம் அதிகமாக வரலாம். ஏனெனில், நீண்ட நேரம் ஏசி நிறுத்தப்படுவதால், அதில் தூசி மற்றும் துகள்கள் அடைத்திருக்கும். அத்தகைய சூழ்நிலையில், குளிர்ச்சியை தர மெஷின் நிறைய வேலை செய்ய வேண்டி வரும். அதனால் மறக்காமல் சர்வீஸ் செய்யுங்கள்.