சேலம் மாவட்டம் மேச்சேரி இந்திரா நகரைச் சேர்ந்தவர் நடராஜன். அப்பகுதியில் ஸ்டுடியோ ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு சுசீலா என்ற மனைவியும், ஹேமராணி என்ற மகளும் உள்ளனர். இவர்களது வீட்டில், 20 மாதங்களாக ஹைடி என்ற ஆண் பொமேரியன் வகை நாயும், 9 மாத சாரா என்ற பெண் பொமேரியன் வகை நாயும் வளர்த்து வருகிறார்கள்.
இந்த நிலையில், சாரா என்ற பெண் நாய் கர்ப்பம் தரித்தது. இதனையடுத்து, வீட்டில் ஒரு உறுப்பினராக வளர்ந்து வரும் சாராவிற்கு, கர்ப்பிணிப் பெண்களுக்கு நடத்தப்படுவதை போலவே வளைகாப்பு நடத்த வேண்டும் என சென்னையில் படித்து வரும் இவர்களது மகள் ஹேமராணி ஆசைப்பட்டுள்ளார். இதற்கு அவர்களது பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இதனைடுத்து கடந்த 13ம் தேதி வளைகாப்பு விழா கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இதற்கென தனியாக அழைப்பிதழ் அச்சடித்து, உறவினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பின்னர், தனித்தனி இரண்டு நாற்காளிகளில் இரு நாய்களையும் அமர வைத்து, மஞ்சள், சந்தனம், குங்குமமிட்டு, சாராவிற்கு வளையலை மாட்டியுள்ளனர். தொடர்ந்து விழாவிற்கு வந்தவர்களுக்கு இனிப்பு, பஜ்ஜி மற்றும் 5 வகையான அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.
கொரோனா காலத்தில் மிகுந்த சிரமங்களுக்கு இடையே இந்த நாய்களை வாங்கி வந்து வளர்த்ததாகவும், இதன் காரணமாக, இரு நாய்களையும் எனது மகள் மிகுந்த அன்புடன், பரிவு காட்டி வளர்த்து வந்ததாகவும் தெரிவிக்கும் நடராஜன், கடந்த 3 மாதத்திற்கு முன்பு, சாராவிற்கு மஞ்சள் நீராட்டு விழாவை நடத்தியதாகவும், தற்போது, கர்ப்பமடைந்து 60 நாட்களை கடந்ததால், வளைகாப்பு விழா நடத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
பெண் குழந்தைகளுக்கு பிறந்தது முதல், மஞ்சள் நீராட்டு விழா, திருமணம், வளைகாப்பு என ஒவ்வொரு பருவத்திலும் நிகழ்ச்சிகளை நடத்தி, பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்து வருவது வழக்கமாக இருக்கும் சூழலில், வீட்டில் வளர்த்து வரும் செல்லப்பிராணியான நாய்களுக்கு சிறப்பாக வளைகாப்பு விழாவை நடத்தி, கவனம் ஈர்த்துள்ளனர் நடராஜன் குடும்பத்தினர்.