இலக்கிய விருது : இலக்கியத்துக்கான விருது ராஜேந்திரன் ஐ.ஏ.எஸுக்கு வழங்கப்பட்டது. விருதை ஆளுநர் ஆர்.என்.ரவி, பசுமை தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி ஆகியோர் வழங்கினர். இந்தியாவின் முதல் சுதந்திர எழுச்சி தமிழ்நாட்டிலிருந்துதான் துவங்கியது என்பதை மிக ஆதாரபூர்வமாக நிறுவியது இவரது படைப்பு ‘காலா பாணி’. இவர் 2022ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருதை வென்ற எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
YOUTH ICON விருது - சதுரங்க கில்லாடி, உலகின் முதல் நிலை வீரரை வீழ்த்திய முதல் இந்தியர் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு YOUTH ICON விருது வழங்கப்பட்டது. விருதை இந்திய குத்துச்சண்டை வீரர் தேவராஜன், இந்திய பெண்கள் கூடைப்பந்து அணியின் தலைவர் பத்மஸ்ரீ அனிதா பால்துரை வழங்கினர். நற்சான்றிதழை ஆளுநர் வழங்கினார்.
Outstanding corporate social responsibility விருது : கஜானந்தா ட்ரஸ்ட் நிர்வாக இயக்குநர் பி.கே.ஆறுமுகத்துக்கு Outstanding corporate social responsibility வழங்கப்பட்டது. விருதை லூகாஸ் இந்தியன் சர்வீஸ் லிமிடெட் தலைவர் ராகவன் , நடிகை நமிதா வழங்கினர். பல்வேறு சமுக நலப் பணிகளை வழங்கி வரும் கஜானந்தா அறக்கட்டளை துவங்கப்பட்ட கடந்த ஆறு வருடங்களில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு மட்டும் 1,50,000 நபர்களுக்கு சேவைகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்த விருதை ஆறுமுகம் சார்பாக கஜானந்தா டிரஸ்ட் சேர்ந்த வினித் குமார் பெற்றுக் கொண்டார்.
ஊக்கமளிக்கும் பெண்மணிக்கான விருது : ‘அம்மா சமையல்’ மீனாட்சிக்கு ஊக்கமளிக்கும் பெண்மணிக்கான விருது ( inspirational woman) வழங்கப்பட்டது. இந்த விருதை ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ வழங்கினர். தனது சமையல் திறன்களை யூ டியூப் மூலம் வெளி உலகுக்கு எடுத்துக் காட்டியவர். பல்வேறு நாடுகளில் இவரது சமையல் மணம் பரவியுள்ளது. சாதிக்க கல்வி, பொருளாதாரம் தடை அல்ல என நிரூபித்தவர்.
சிறந்த இயக்குநர் விருது : லோகேஷ் கனகராஜ்-க்கு சிறந்த இயக்குநருக்கான விருது வழங்கப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த விருதை வழங்கினார். உடன் நடிகர் கார்த்தி, இயக்குநர்கள் வசந்த், சீனு ராமசாமி மேடையில் இருந்தனர். கமல்ஹாசனை கர்ஜிக்க வைத்த இவரது ‘விக்ரம்’ விண்ணைத் தாண்டியும் வசூல் மழை பொழிந்து வரலாறானது. தன் படைப்புக்களை ஒன்றோடு ஒன்று இணைத்து கதைகள் சொல்லும் வித்தையால் தானா சேர்ந்த கூட்டத்தை உருவாக்கியது இவரின் ’லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ்’ இவரின் கால் சீட்டுக்கு சல்மான் கான்களும் ஷாருக் கான்களும் காத்திருக்க ‘லியோ’ வின் மாஸ் விருந்துக்கு காத்திருக்கிறது இவரது யுனிவர்ஸின் பெரும் படை.
வணிக முன்னோடி விருது : மில்கி மிஸ்ட் டெய்ரி ஃபுட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டி.சதீஷ் குமார்-க்கு வணிக முன்னோடி விருது (Business leader award) வழங்கப்பட்டது. அவர் சார்பாக உதவி பொது மேலாளர் விடுதலை பெற்றுக் கொண்டார். இந்த விருதை ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார். பால் பண்ணையில் ஆரம்பித்து பன்னீர் தயாரிப்பில் பயணித்து இன்று தயிர் விற்பனையில் கொடி கட்டி பறக்கும் இவரின் உழைப்பு ‘அடடா’ என வியக்கும் ஒரு ஆச்சரியம். 2007-08-இல் இவரின் டேர்ன் ஓவர் ரூ.13.78 கோடி. அதுவே. 2015-16-இல் அது ரூ.290 கோடி. காரணம்.
கலை, கலாச்சார விருது : கலை மற்றும் கலாச்சார விருது பாடகர் ‘தெருக்குரல்’ அறிவுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை ஆளுநர் ஆர்.என்.ரவி, நியூஸ் 18 executive vice president ராஜேஷ் வழங்கினர். அதிகாரத்திற்கு எதிரான ஒடுக்கப்பட்ட மக்களின் வலி குறித்தான இவரது பல பாடல்கள் கவனம் பெற்றது. ரஜினிகாந்த் – பா.ரஞ்சித் கூட்டணியில் வெளியான ‘காலா’ படத்தில் ‘உரிமையை மீட்போம்’ பாடலை எழுதியதன் மூலம் தமிழ் சினிமாவிலும் இவரது குரல் ஒலிக்க தொடங்கியது. ’வட சென்னை’ , ‘ஜிப்சி’ , ’சூரரைப் போற்று’. ‘மாஸ்டர்’ திரைப்படங்களில் பாடல்களை எழுதியும் பாடியும் வெள்ளித் திரையையும் தெறிக்கவிட்டவர் ‘தெருக்குரல்’ அறிவு.
சிறந்த கண்டுபிடிப்புக்கான விருது : சிறந்த கண்டுபிடிப்புக்கான விருது செல்வ முரளிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை ஆளுநர் ஆர்.என்.ரவி, பொன்வண்டு சோப் மேடிக் லிக்யுட்-ன் மூத்த பிரதிநிதி பி.சிவா ஆனந்த் வழங்கினர். இவர் உருவாக்கிய ‘விவசாயம்’ என்ற வேளாண் துறை சார்ந்த செயலி கூகுளின் சி.இ.ஓ சுந்தர் பிச்சையையே வியப்பில் ஆழ்த்தியது. டெல்லிக்கு அழைக்கப்பட்ட இவர் சுந்தர் பிச்சையை சந்தித்து பாராட்டுக்களையும் பெற்றார்.
சிறந்த திரைப்படத்துக்கான விருது : டாணாக்காரன் படத்திற்கு சிறந்த திரைப்படத்துக்கான விருது வழங்கப்பட்டது. தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, இயக்குநர் தமிழ் உள்ளிட்ட படக்குழுவினருக்கு விருது வழங்கப்பட்டது. விருதை சபாநாயகர் அப்பாவு, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சோமு, காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் செல்வபெருந்தகை வழங்கினர்.
விளையாட்டுப் பிரிவில் விருது : டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன் விளையாட்டுப் பிரிவின் விருதை பெற்றார். இந்த விருதை சபாநாயகர் அப்பாவு வழங்கினார். சபாநாயகருடன் இணைந்து முன்னாள் அமைச்சர்கள் வைகை செல்வன் , விஜயபாஸ்கர், சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் வழங்கினர். இந்திய டேபிள் டென்னிஸின் இளம் அடையாளம் சென்னையைச் சேர்ந்த சத்தியன் ஞானசேகரன். உலக டேபிள் டென்னிஸ் தரவரிசையில் முதல் 25 இடத்திற்குள் நுழைந்து சாதனை படைத்த முதல் இந்தியரும் இவரே.
சிறந்த ஓடிடி திரைப்படத்திற்கான விருது - ‘மகான்’ படத்திற்கு சிறந்த OTT Premiere பிரிவின் கீழ் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை seven screen தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர் லலித் குமார் மற்றும் குழுவினர் பெற்றுக் கொண்டனர். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம் நடிப்பில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது ‘மகான்’. ஒழுக்க சீலனாக வாழும் ஒரு சாதாரண மனிதன் எப்படி வாழ்க்கையில் அதற்கு நேரெதிர் திசைக்கு செல்கிறான் என்பதை பரபரப்பும் பாசமும் கலந்து சொன்னது இப்படத்தின் கதை.