ரயில் பெட்டி தயாரிப்பில் உலகளவில் சிறந்து விளங்கும் ஐசிஎப் நிறுவனம் கடந்த 1955 ம் தொடங்கப்பட்டது . வந்தே பாரத் , கதி சக்தி உட்பட இந்தியாவில் பயன்படுத்தப்படும் ரயில்களுக்கான பெட்டிகள் மட்டுமின்றி தான்சானியா , அங்கோலா , ஸ்ரீலங்கா , வங்கதேசம் , நேபாளம், மலேசியா , வியட்நாம் , பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு ஐசிஎப் நிறுவனம் ரயில் பெட்டிகளை தயாரித்து வழங்கியுள்ளது .
இந்நிலையில் ஐசிஎப் நிறுவனத்தில் 70 ஆயிரமாவது ரயில் பெட்டி நேற்று தயாரிக்கப்பட்டதாக ஐசிஎப் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரல் மாதம் முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 27 வந்தே பாரத் ரயில்களுக்கான பெட்டிகள் உட்பட 3, 100 ரயில் பெட்டிகளை தயாரிக்க ஐசிஎப் சார்பில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் 4 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.