2008-ம் ஆண்டு முதலாவது ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் ஆட்டத்தில் தோற்ற பிறகு வீரர்களுடன் கைகுலுக்கிய போது, திடீரென பஞ்சாப் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்தை கன்னத்தில் அறைந்தார். ஸ்ரீசாந்த் கண்ணீர் விட்டு தேம்பி தேம்பி அழுத காட்சி விளையாட்டு உலகை அதிர வைத்தது. ஏன் ஹர்பஜன் சிங் ஸ்ரீசாந்தை அடித்தார் என்ற காரணம் இன்று வரை புரியாத புதிராக உள்ளது. ஆனால் அந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி மோசமாக விளையாடியதை ஸ்ரீசாந்த் கேலி செய்ததால்தான் கோபத்தில் கன்னத்தில் அறைந்தார் என தகவல் வெளியானது.
பாலிவுட் நடிகரும் கொல்கத்தா அணியின் உரிமையாளருமான ஷாருக்கான், மும்பையின் வான்கடே மைதானத்தில் வர ஐந்து ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. ஒரு போட்டிக்கு பின் நிர்வாகிகளிடம் முறையற்ற வகையில் நடந்துகொண்டதாக கூறி, மும்பை கிரிக்கெட் சங்கம் இந்த தடையை விதித்தது. அதாவது, மைதானத்தின் பாதுகாவலர் ஒருவரிடம் ஷாருக்கான் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகாத முறையில் நடந்துக்கொண்டதாக குற்றச்சாட்டப்பட்டது.
ஐபிஎல் சூதாட்டம் சர்ச்சை: 2013-ம் ஆண்டு ஐ.பி.எல்.போட்டியில் 'ஸ்பாட்பிக்சிங்' எனப்படும் சூதாட்டம் நடந்ததாக பெரும் சர்ச்சை வெடித்தது. குறிப்பிட்ட இரு ஆட்டங்களில் 'ஸ்பாட் பிக்சிங்' செய்ததாக ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கித் சவான், அஜித் சண்டேலா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அதன் தொடர்ச்சியாக சென்னை சூப்பர் கிங்ஸ். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளின் நிர்வாகிகளுக்கு சூதாட்டத்தில் தொடர்பு இருந்தது விசாரணையில் உறுதியானதால் இவ்விரு அணிகளுக்கும் இரண்டு ஆண்டு தடை விதிக்கப்பட்டது.
ஐ.பி.எஸ்.-ல் டெக்கான் சார்ஜாஸ், கொச்சி டஸ்கர்ஸ் ஆகிய அணிகளுக்கு வங்கி உத்தரவாத தொகைகொடுப்பதில் சிக்கல், ஒப்பந்த விதிமீறல் காரணமாக ஐ.பி.எல்.-ல் இருந்து பாதியிலேயே நீக்கப்பட்டன. சஹாரா குழுமத்துக்கு சொந்தமான புனே வாரியர்ஸ் அணி 2013-ம் ஆண்டில் விலகிக் கொண்டது.மேலும் சூதாட்ட புகார் காரணமாக சென்னை. ராஜஸ்தான் அணிகளுக்கு இரண்டு ஆண்டு தடைவிதிக்கப்பட்ட சமயத்தில் தற்காலிக மாற்றாக குஜராத் லயன்ஸ், புனே சூப்பர் ஜெயன்டல் ஆகிய அணிகள் 2 ஆண்டுக்கு கலந்து கொண்டன. இதில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணியில் இருந்த வீரர்கள் அந்த இரு அணிகளில் விளையாடினர்.