இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இந்தியா வென்ற நிலையில் இருஅணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் இந்தியா வென்ற நிலையில் மிட்செல் ஸ்டார்கின் மிரட்டலான பந்துவீச்சால் இரண்டாவது போட்டியை ஆஸ்திரேலியா வென்றது. இதனையடுத்து இந்த தொடரானது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வேகப் பந்துவீச்சாளர்கள் மிரட்டினார்கள். சென்னை சேப்பாக்கத்தில் பெரிய அளவில் ரன்களை குவிக்க முடியாது. எனவே இரண்டு அணி வீரர்களும் முடிந்த அளவு ரன்களை திரட்டுவதில் குறியாக இருப்பார்கள். சேப்பாக்கம் மைதானத்தில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. 2017 ஆஸ்திரேலியா இங்க விளையாடிய போது மழையால் போட்டி பாதிக்கப்பட்டது.
சென்னை பிட்ச் கண்டிஷனை பார்க்கையில் இந்தியா 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கலாம். இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பி வருகின்றனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம்வீரர் சூர்ய குமார் 2 போட்டிகளிலும் முதல் பந்திலே நடையை கட்டி ஷாக் கொடுத்து வருகிறார். மிட்செல் ஸ்டார்கின் இன் ஸ்விங்-கில் தடுமாறும் சூரிய குமார் யாதவ் 2 முறை எல்.பி.டபிள்யூ முறையில் விக்கெட்டை தாரை வார்த்தார். இந்திய வீரர்களுக்கு ஸ்டார்க் மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறார்.
ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னர், மேக்ஸ்வெல் அணிக்கு திரும்பலாம் எனத் தெரிகிறது. கூடுதல் ஸ்பின்னர்களுடன் ஆஸ்திரேலியா களமிறங்க வாய்ப்பு உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானம் சுமார் 40,000 இருக்கைகளோடு புதுப்பொலிவு பெற்றுள்ளது. மைதானத்தில் போட்டியை காண்பதற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.அக்டோபர்- நவம்பர் மாதங்களில் இந்தியாவில் ஒரு நாள் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அதற்கு முன்னோட்டமாக அமைந்துள்ள இந்த தொடரில், வெற்றியை பதிவு செய்ய இந்திய அணி கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.