திருமலை திருப்பதியில் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கில் தயாரிக்கப்படும், லட்டு பிரசாதம் வெறும் உணவு பண்டம் மட்டுமல்ல. அதையும் தாண்டி ஏழுமலையானின் பரிபூரண பிரசாதமாக பலராலும் விரும்பப்படுகிறது. அதில், சர்க்கரை, முந்திரி, திராட்சை ஆகியவற்றுடன் பெருமாளின் அருளும் கலந்திருப்பதாக காஞ்சி பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சாமிகள் பலமுறை குறிப்பிட்டுள்ளார்.
திருப்பதி கோயிலில் லட்டு வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளை கடந்து தொடர்கிறது. திருப்பதியில் கி.பி.1445ஆம் ஆண்டு வரை ’திருப்பொங்கம்’ என்ற பெயரில் பிரசாதம் வழங்கப்பட்டது. அந்த ஆண்டிலிருந்து ‘சுய்யம்’ என்ற இனிப்பு பிரசாதமாகக் கொடுக்கப்பட்டது. 1455ஆம் ஆண்டு முதல் அப்பம் கொடுக்கத் தொடங்கினார்கள். 1460ஆம் ஆண்டில் அது வடையாக மாறியது. 1468ஆம் ஆண்டு முதல் வடைக்கு பதில் அதிரசம் தரப்பட்டது. 1547ஆம் ஆண்டு மனோஹரம் எனப்படும் இனிப்பு வழங்கப்பட்டது.
அதன் பின்னர் 1803ஆம் ஆண்டு மதராஸ் மாகாணம் அமல்படுத்திய பிரசாத விநியோக முறையில் பூந்தி பிரசாதமாக வழங்கப்பட்டது. 1940ஆம் ஆண்டு முதல் பூந்திக்கு பதில் லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை லட்டுதான் பிரசாதமாக திருப்பதியில் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ஏழுமலையான் அருளுடன் மிகுந்த சுவையுடன் திருப்பதி லட்டு உள்ளது. ஆரம்பத்தில் லட்டு ஒன்று எட்டு அனாவிற்கு விற்கப்பட்டது. தற்போது பக்தர்களுக்கு சலுகை விலையில் ரூ.70க்கு 4 லட்டும், கூடுதல் லட்டு ரூ.50க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
திருப்பதி பிரம்மோற்சவம் மற்றும் விழாக்காலங்களில் 5 லட்சம் லட்டுகள் வரை தயாரிக்கப்படும். நாள் ஒன்றுக்கு 8 லட்சம் லட்டுக்களை செய்யும் திறன் கொண்டதாக லட்டு கூடம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முழு ஆதர்வில் புதிய அமைப்பில் பூந்தி ஆலையில் மனிதர்கள் இல்லாமல் பூந்தி உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஜெர்மனி, ஆஸ்திரேலியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன. உயர்தர இயந்திரங்கள் மூலம் லட்டு தயாரிக்கத் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
லட்டு தயாரிக்க கடலை மாவு, முந்திரி, ஏலக்காய், நெய், சர்க்கரை, கற்கண்டு மற்றும் உலர்ந்த திராட்சை ஆகியவை லட்டு தயாரிக்க பயன்படுத்தபடும் மூலப்பொருட்கள். நாள் ஒன்றுக்கு கடலை மாவு சுமார் 10 டன், சர்க்கரை 10 டன், முந்திரி 700 கிலோ, ஏலக்காய் 150 கிலோ, நெய் 300 முதல் 500 லிட்டர், கற்கண்டு 500 கிலோ, காய்ந்த திராட்சை 540 கிலோ மூலப்பொருட்களாக லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. திருப்பதி தேவஸ்தானத்தால் இந்த பொருட்களுக்கு டெண்டர் விடப்பட்டு கொள்முதல் செய்யப்படுகிறது.
புவிசார் குறியீடு: திருப்பதி லட்டை கள்ளச் சந்தையில் விற்பதைத் தடுக்கும் விதமாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் திருப்பதி லட்டுக்கு 2008ம் ஆண்டு புவிசார் குறியீட்டுக்கு பதிவு செய்தது. 2009 ஆண்டு திருப்பதி லட்டு புவியியல் அறிகுறிகள் போன்ற உணவு வகையின் கீழ் ஜி.ஐ. சட்டம் 1999 படி பதிவு செய்யப்பட்டது. இதனால் மற்றவர்கள் அதே பெயரில் இனிப்பு தயார் செய்யவும், இதன் பெயரைப் பயன்படுத்தவும் தடை செய்யப்பட்டுள்ளது.