சபரிமலையில் கடந்த மாதம் 27-ந் தேதி மண்டல பூஜை நடந்தது. பிறகு அன்றைய தினம் இரவு நடை அடைக்கப்பட்டது. பின்னர் மகர விளக்கு பூஜைக்காக மீண்டும் 30-ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் பக்தர்களின் கூட்டம் கட்டுக் கடங்காமல் இருப்பதால் தரிசனம் செய்ய கூடுதலாக 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் 8 முதல் 10 மணி நேரம் வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. தினமும் 1 லட்சம் பக்தர்கள் வருகை தருகின்றனர். இதற்கிடையே மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் வருகிற 14- ந் தேதி நடைபெறுகிறது. மகர விளக்கு தினத்தில் அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் பத்தனம்திட்டை மாவட்டம் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக 12, 13-ந் தேதிகளில் சன்னிதானத்தில் இரவு பிரசாத சுத்தி, வாஸ்து ஹோமம், வாஸ்து பலி, வாஸ்து கலசம், அஸ்திர கலசம் ஆகியவை நடைபெறும். 14-ந் தேதி மாலை 5.30 மணிக்கு சன்னிதானம் வந்தடையும் திருவாபரண ஊர்வலத்திற்கு சன்னிதானத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
பிறகு திருவாபரணங்கள் அய்யப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து 6.30 மணிக்கு பொன்னம்பல மேட்டில் ஜோதிவடிவில் அய்யப்பன் பக்தர்களுக்கு காட்சி தருவார். அதனைதொடர்ந்து நடைபெறும் வழக்கமான பூஜை, வழிபாடுகளுக்கு பிறகு 20-ந் தேதி காலை 7 மணிக்கு பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதியின் தரிசனத்திற்கு பிறகு நடை அடைக்கப்படும்.